தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக, ஆட்சி அமைக்க முடியாமல் பிற கட்சிகளிடம் பேசி வருகிறது. அதன் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தவெக தலைவர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி காங்கிரஸின் ஆதரவை உறுதிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் பனையூரில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து தங்கள் ஆதரவுக் கடிதத்தை வழங்கினர். அதற்குப் பிறகு, தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து, ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உரிமைக் கோரினார். நாளை பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் கூறப்பட்டு வந்தது. மேலும், விசிக தவெகவுக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக நாளை விசிக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமியின் பசுமைவழிச் சாலை இல்லத்தில் அ.தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒ.எஸ்.மணியன் தரப்பு தவெக-வுக்கு ஆதரவு தரவே தேவையில்லை எனவும், சி.வி சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தரப்பு அமைச்சரவையில் இடம் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆதரவு தருவோம் எனவும், இன்னொரு தரப்பு நிபந்தனையற்ற ஆதரவு தரலாம் எனவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கே.பி.முனுசாமி பசுமைவழிச் சாலை இல்லத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தவெக-வுக்கு அதிமுக ஆதரவு என பல்வேறு செய்திகள் வெளியாகி விவாதிக்கப்பட்டு வருகிறது. அது முற்றிலும் தவறான செய்தி. அதிமுக மிகப்பெரிய இயக்கம். சீரோடும், சிறப்போடும் செயல்படும் இந்த இயக்கம் எந்தச் சூழலிலும் தவெக-வுக்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை. இதை எடப்பாடியாரின் அனுமதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.