International
oi-Vignesh Selvaraj
பாங்காக்: தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரபல பப் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 63 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் வடக்குப் பகுதியில் உள்ள பிரபலமான மதுபான விடுதி ஒன்றில் நள்ளிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் முதன்மை வாயில் வழியாக வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

இந்த தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 63 பேர் காயமடைந்துள்ளனர். மெயின் சுவிட்ச் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து, அது கட்டிடம் முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது.
தாய்லாந்து பிரதமர் அனுடின் சான்விராகுல் தீ விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டுள்ளார். அப்போது, தீ விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் அது தொடர்பாக விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தீயணைப்புப் படையினர் சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தக் கோர விபத்தின் பின்னர் அங்கு வந்திருந்த பலரைக் காணவில்லை எனவும் இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
தீ விபத்தின் போது பாதிக்கப்பட்டவர்களில் சிலர் அந்த இடத்தின் கழிவறைகளுக்குள் தஞ்சம் புகுந்ததாகவும், உயிரிழந்தவர்களில் பலர் கழிவறைகளிலேயே கண்டெடுக்கப்பட்டதாகவும் தாய்லாந்து நாட்டு ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த தீ விபத்தில் 27 பேர் பலியானதுடன் 63 பேர் காயமடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 22 பேர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.