தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தாராபுரம் தனி தொகுதியில் வெற்றி பெற்று பதவியை ராஜினாமா செய்து த.வெ.க- வில் இணைந்த சத்யபாமாவை, த.வெ.க வேட்பாளராக களமிறக்கியிருக்கிறது அக்கட்சியின் தலைமை. தி.மு.க வேட்பாளராக தொழில்முறை வழக்கறிஞர் சுகன்யா என்பவரை களத்தில் இறக்கியுள்ளனர். அதேபோல அ.தி.மு.க வேட்பாளராக பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கார்த்திகா என முக்கியக் கட்சிகள் அனைத்தும் தாராபுரம் தொகுதியில் பெண் வேட்பாளர்களைக் களத்தில் இறக்கியுள்ளன. நாளையுடன் வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தாராபுரம் தனி தொகுதி தி.மு.க வேட்பாளராக வழக்கறிஞர் சுகன்யா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துவிட்டு முன்னாள் அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன் கயல்விழி, செல்வராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

மற்ற வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், வேட்பாளரை இன்று மாலை அறிவிக்க உள்ளனர். தாராபுரம் தொகுதியில் வெற்றிபெற்றாக வேண்டும் என்கிற முனைப்புடன் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி தற்போதே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.