திமுகவுடன் கூட்டணி என சொன்னதே இந்த 3 பேர்தான்! இபிஎஸ் இல்லை! அதிமுக Ex அமைச்சர் வீசிய வெடிகுண்டு! | ADMK Ex Minister Shanmuganathan claimed about the 3 for DMK alliance

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

கோவில்பட்டி: திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி சண்முகம் ஆகியோர்தான் முடிவெடுத்து எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டார்கள் என கோவில்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் கூட்டரங்கில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ். பி. சண்முகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

admk

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் , “அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெளிவாக கூறியுள்ளார். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அதிமுக வலுவாக இருக்கும், மக்களுக்குத் தொண்டு செய்யும் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் என்பதை அப்போதே சொல்லியிருக்கிறார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காலையில் ஒன்று, மாலையில் ஒன்று பேசுபவர் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் அவர் பேசிய வீடியோக்களைப் பார்த்தால் அதில் பல வித்தியாசங்கள் இருக்கும். அவர் நிலை இல்லாதவர். அரசியலில் பெரிய ஆள் என்று பெயர் வாங்கினாலும், சமீபகாலமாக மிகக் கீழ்த்தரமான அரசியல் செய்து வருகிறார்.

கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவதற்காகக் கூட்டம் கூட்டப்படவில்லை, சசிகலா முதலமைச்சராக வருவதற்காகத்தான் அந்த கூட்டம் கூட்டப்பட்டது. அந்த சூழ்நிலை வேறு, இந்த சூழ்நிலை வேறு. அதனால்தான் நான் அங்கிருந்து அன்று விலகி ஓபிஎஸ்ஸுடன் சென்றேன்.

கடந்த கால திமுக ஆட்சியில் அவர்கள் செய்த தவறுகளை மக்களிடம் எடுத்துச் சென்றோம். தற்போதும் மக்கள் படும் இன்னல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முழுமையாக ஈடுபட்டு வருகிறோம்.

தமிழகத்தில் ஊழலை ஒழிப்போம் என்று விஜய் கூறுகிறார், ஆனால் எந்த அரசு அலுவலகத்தில் ஊழல் இல்லை? அமைச்சர்கள் மத்தியிலேயே “கடந்த நிலைமையே தொடரட்டும்” என்று பேசப்பட்டு வருகிறது.

பழனி கோவிலில் நடந்த தவறுக்கு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் பொறுப்பேற்க வேண்டும். முதலமைச்சர் முதலில் அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும். விசாரணை என்பது இரண்டாவது பட்சம். தவறு இல்லை என்றால் மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளட்டும்.

ஊழல ஒழிப்போம், தூய சக்தி என்று கூறிவிட்டு குட்கா ஊழலில் தொடர்புடைய சி.விஜயபாஸ்கரை தவெகவில் சேர்த்து உள்ளார். அரசு நிர்வாகம் நகைச்சுவையாக உள்ளது.

பள்ளிகள் பதிவு புதுப்பித்தலில் அதிமுக, திமுக ஆட்சியில் லஞ்சம் பெறப்பட்டதாக சொல்லும் புகாரில் எனக்கு வேண்டிய ஆட்கள் சிக்குவர். போன ஆட்சியில் டெண்டர் விட்ட பணிகளுக்கு கமிஷன் வாங்கி இருப்பார்கள், ஆனால் தற்போது வந்தவர்களுக்கு கமிஷன் கிடைக்காது என்பதால் டென்டர்களை ரத்து செய்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது குடி மராமத்து பணி மூலமாக வண்டல் மண், இலவசமாக வழங்கப்பட்டது. தற்போதும் தவெக அரசு காசுக்கு வண்டல் மண்ணை கொடுப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி எந்த ஒரு கருத்தும் சொல்லவில்லை. சிவி. சண்முகம் கட்சிக்கு விரோதமாக பேசிக் கொண்டிருக்கிறார். அவர் அப்படித்தான் பேசுவார். திமுகவுடன் கூட்டணி என்று வேலுமணி, தங்கமணி, சி.வி சண்முகம் ஆகியோர்தான் முடிவெடுத்து பேசினார்கள். இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த ஒரு தொடர்பும் கிடையாது. தங்களுக்குப் பதவி வேண்டும் என்பதற்காக சிலர் தவெகவுக்கு சென்றுள்ளதாக சண்முகநாதன் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *