
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து திமுக ஆட்சியை இழந்தது. இதன் காரணமாக அதன் கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறி வருகின்றன. காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளைத் தொடர்ந்து, தற்போது மதிமுகவும் திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது.
சென்னை அண்ணா நகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், திமுக கூட்டணியில் இருந்து முற்றிலும் விலகுவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மதிமுக இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இக்கூட்டத்தில் தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்தும், தேர்தல் நேரத்தில் தவெக உடனான கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியுள்ள அதே வேளையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் அதிருப்தியும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. நேற்று நடைபெற்ற மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்காத சீர்காழி தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. செந்தில் செல்வன், தான் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலும் மதிமுகவின் கடையநல்லூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் மற்றும் சீர்காழி எம்.எல்.ஏ. செந்தில் செல்வன் ஆகிய இருவருமே பங்கேற்கவில்லை. கூட்டணியை விட்டு வெளியேறும் வேளையில், தங்களது கட்சியின் இரு சட்டமன்ற உறுப்பினர்களும் பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் போனது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.