ராணிப்பேட்டையில் இன்று, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “தோல்வி ஏற்பட்டதில் இருந்து ஆ.ராசா மிகுந்த மன உளைச்சலில் பலவிதமாக உளறி வருகிறார். விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகள் மீது அவர் தாக்குதல் நடத்துவதன் மூலமாக தி.மு.க எனும் பேரியக்கத்தை பா.ஜ.க-வுடன் அல்லது பா.ஜ.க பாதையில் இழுத்துச் செல்கிறாரோ? என்கிற ஐயம் எனுக்குள் இருக்கிறது.
திராவிடக் கொள்கைகளை அழுத்தமாக, வலிமையாகப் பேசி வருகின்ற இயக்கங்களான விடுதலைச் சிறுத்தைகளும், இடதுசாரிகளும் புரட்சியாளர் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியாரின் கொள்கைகளுடனும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

விடுதலைச் சிறுத்தைகளை விமர்சிப்பதன் மூலமாக அல்லது விடுதலைச் சிறுத்தைகள் மீது அவதூறுகளைக் கொட்டுவதன் மூலமாக அவர் என்ன சொல்ல வருகிறார்? அதைத்தான் நாம் கேட்கிறோம். எனவேதான் பா.ஜ.க பக்கம் தி.மு.க-வை இழுத்துச் செல்ல முயல்கிறாரா? என்ற ஐயம் ஏற்படுகிறது. அந்தப் பின்னணியில்தான் அவர் எங்களை விமர்சனம் செய்கிறாரே தவிர வேறு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.
முதல்வர் ஜோசப் விஜய் மிகுந்த தெளிவுடன் இடதுசாரி கொள்கையோடு ஆட்சி நடத்துகிறார். முதல்வரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். சமூகநீதி தொடர்பாக, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக மரியாதைக்குரிய அன்புமணி ராமதாஸும் முதல்வரைச் சந்தித்திருக்கிறார். எங்களின் கொள்கையும், கோட்பாடும் அதுதான். எனவே, மரியாதைக்குரிய அன்புமணி ராமதாஸ் முதல்வரைச் சந்திப்பதும், முதல்வருடன் நெருக்கம் காட்டுவதும் தவறில்லை’’ என்றார்.