மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகனும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜியின் நிலைப்பாட்டிற்கு எதிராக, அதிருப்தி திரிணாமுல் தலைவர்கள் சந்தித்துப் பேசியதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, எம்.எல்.ஏ-க்களான சந்திபன் சஹா மற்றும் ரிதப்ரதா பானர்ஜி ஆகிய இருவரை கட்சி தலைமை திங்கள்கிழமை இடைநீக்கம் செய்தது.
கட்சியின் மூத்த தலைவரும் எம்.எல்.ஏ-வுமான குணால் கோஷ், “தவறாக வழிநடத்தப்பட்டு” கட்சித் தலைமைக்கு எதிராகச் செல்லும் எம்.எல்.ஏ-க்களிடம் “கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மம்தாவே திங்களன்று தனது ஃபேஸ்புக் லைவ் மூலம், திரிணாமுல் காங்கிரஸை உடைக்க சதி நடப்பதாக ஒப்புக்கொண்டார்.
இது மம்தா பானர்ஜியின் அரசியல் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலகட்டங்களில் ஒன்று. 1998-ல் அவர் திரிணாமுல் காங்கிரஸைத் தொடங்கியபோது, அவருக்கு 40 வயது. இப்போது 71 வயதில், மூன்று தசாப்தங்களுக்கு முன்பு, தான் உருவாக்கிய கட்சியை தக்கவைத்துக்கொள்ளவும், தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் போராட வேண்டிய சவாலை எதிர்கொள்கிறார். இந்த 30 ஆண்டுகளில், 15 ஆண்டுகள் திரிணாமுல் ஆட்சியில் இருந்தது, அது அவரது உழைப்புக்கு கிடைத்த ரிசல்ட்.!
மேற்கு வங்கத்தில் கடந்த 50 ஆண்டுகளில் ஆட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட எந்தக் கட்சியும் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 1977-ல் இடதுசாரிகளால் வெளியேற்றப்படுவதற்கு முன்பு காங்கிரஸ் மட்டுமே அந்த அரிய சாதனையைச் செய்தது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீதான கொள்கை ரீதியான அர்ப்பணிப்பும் கேள்வியாகியுள்ளது. நடிப்பு மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒரு பெரிய பகுதியாக உள்ளனர். அவர்கள் வாக்காளர்களை ஈர்ப்பார்கள் என்பதாலும், சாதகமான கள நிலவரத்தாலும் அவர்களுக்கு சீட்டுகள் வழங்கப்பட்டன, அவர்களும் வெற்றி பெற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இப்போது திரிணாமுல் காங்கிரஸுடன் தொடர்ந்து இருப்பார்களா என்பது சந்தேகமே, அதன் அறிகுறிகளை நாம் ஏற்கெனவே காணத் தொடங்கிவிட்டோம் என்கிறார்கள் தேசிய அரசியல் பார்வையாளர்கள்.