திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே இருக்கிறது 94 கரியமாணிக்கம்.
தினமும் கொத்து கொத்தாக 300-க்கும் மேற்பட்ட குரங்குகள் 94 கரியமாணிக்கம் கிராமத்திற்குள் சுற்றி வருவதாகவும், வீட்டில் உள்ள உணவுப் பொருட்களைத் தின்று சேதப்படுத்துவதாகவும், இவ்வாறு அதிகரித்து வருகின்ற குரங்குகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை எனவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், குரங்குகள் தொல்லையால் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கிராமத்தையொட்டி சிறுகனூர் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் குரங்குகள், மான்கள், காட்டுபன்றி மற்றும் பல உயிரினங்கள் வசித்து வருகின்றன.
இதையடுத்து, அவை உணவுக்காக அப்பகுதியைச் சுற்றியுள்ள சணமங்கலம், பெரகம்பி, 94 கரியமாணிக்கம், சமயபுரம் மற்றும் எதுமலை போன்ற கிராமப்பகுதிகளுக்கு வருவதாகவும், குரங்குகளின் சேட்டைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் வாசிக்கிறார்கள்.
இதில் குறிப்பாக, 94 கரியமாணிக்கத்தில் குரங்குகள் நாள்தோறும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்து வருவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.
அதுமட்டுமின்றி, கிராமத்தைச் சுற்றிலும் உள்ள விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி செடிகள் மற்றும் காய்களைக் கடித்து நாசம் செய்து விடுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிகின்றனர்.