திருச்சி மாநகரம், காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. பெற்றோர் இருவரும் இல்லாத நிலையில் அவருடைய உறவினர் அரவணைப்பில் அந்தச் சிறுமி வளர்ந்து வருகிறார்.
அந்தச் சிறுமி சற்று மனநல சவாலுடையவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த பள்ளியில் படிக்கும் நான்கு சிறுவர்கள் அந்தச் சிறுமியை ஏமாற்றி அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் ஒரு கட்டடத்தில் ஆட்கள் இல்லாத நேரத்தில் அழைத்துச் சென்று சிறுமிக்குப் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். அடிக்கடி அவர்கள் அவ்வாறு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அந்தச் சிறுமி உடல் நலம் சரியில்லாமல் இருந்ததைக் கண்டு அந்தச் சிறுமையில் சித்தி, இது குறித்து விசாரித்துள்ளார். அப்பொழுது, அந்தச் சிறுமி நடந்தவற்றை தெரிவித்துள்ளார். உடனடியாக, அந்தச் சிறுமியை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர்ந்து, அவர்கள் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை செய்த போலீஸார் நான்கு சிறுவர்களையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர்.
சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த நான்கு சிறுவர்கள் கைதாகியுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.