திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் எல்லைக்குட்பட்ட புறத்தாக்குடி கிராமம், நோவா நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது: 52). அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மலைக்கோட்டை பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவர், கடந்த 2014-ல் உடல்நலக் குறைவால் பணியை ராஜினாமா செய்தார்.
தற்போது, தனது மனைவி இளஞ்சியத்துடன் (வயது: 48) சேர்ந்து விவசாயம் செய்து வருகிறார். இவர்களுக்கு பார்த்திபன் (வயது: 32) என்ற மகனும், பிரியா (வயது: 28) என்ற மகளும் இருந்தனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் பார்த்திபன் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலை செய்து வந்தார்.
இவருக்குத் தீவிரமான மதுப் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. மது அருந்தும் போதெல்லாம் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தனது பெற்றோர் மற்றும் தங்கையை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார்.

மேலும், தனது வருமானம் குடிப்பதற்கே போதாததால், ஆன்லைனிலும், வெளிநபர்களிடமும் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால், தனது தந்தை நடராஜனிடம் சொத்துகளை விற்றுப் பணம் தருமாறு போதையில் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில், ஈரோட்டில் வேலை பார்த்து வந்த பார்த்திபன், மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தனது தாய் இளஞ்சியத்திடம் நிலத்தை விற்றுப் பணம் தருமாறு மிரட்டி, அவரைத் தாக்கியுள்ளார். இதைக் கண்ட நடராஜன், மகனைத் தடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்.