ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், திருச்சியில் தங்கி அங்குள்ள கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ படித்துக் கொண்டே, பகுதிநேர வேலை பார்த்து வந்துள்ளார்.
இவருக்கும், சிவகங்கை மாவட்டம், சாலை கிராமத்தைச் சேர்ந்த வியாகுல நவீன் என்ற வாலிபருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதல் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை இருவரும் திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலை நடைமேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வியாகுல நவீன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரைத் திருமணம் செய்ய அப்பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது. ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற நவீன், திடீரென கீழே கிடந்த கல்லை எடுத்து அப்பெண்ணின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் அந்தப் பெண் மயங்கி விழுந்த நிலையிலும், நவீன் தொடர்ந்து அவரைத் தாக்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வழியே சென்ற பொதுமக்கள், உடனடியாக பாய்ந்து சென்று நவீனை மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து கல்லூரி மாணவியை மீட்ட பொதுமக்கள், நவீனின் கைகளைக் கட்டி வைத்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கே.கே.நகர் காவல் நிலைய போலீஸார், பலத்த காயமடைந்த மாணவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைதான நவீனிடம் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தன்னை விட்டுவிட்டு வருமாறு பெண்ணின் பெற்றோர் வற்புறுத்திய ஆத்திரத்தில் கல்லூரி மாணவியை தாக்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
திருச்சியின் மையப் பகுதியில், நடுரோட்டில் கல்லூரி படிக்கும் மாணவி ஒருவரை வாலிபர் கல்லால் தாக்கியதும், அவருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்ததும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.