திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கீழ ஆதிகுடி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் 7 அடி அகலம் 15 அடி ஆழம் கொண்ட பாழடைந்த கிணற்றில் இருந்து கடந்த சில தினங்களாக கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால், சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக லால்குடி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் லால்குடி டி.எஸ்.பி ராஜ்மோகன், காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றைப் பார்வையிட்டனர்.
அப்போது, கிணற்றுக்குள் அழுகிய நிலையில் இரண்டு வாலிபர்களின் சடலங்கள் குப்புறக் கிடப்பது தெரியவந்தது. மேலும், கிணற்றின் அருகே கிடந்த லுங்கி, டீசர்ட், இரண்டு ஜோடி காலணிகள், செல்போன், அரிவாள் மற்றும் கடப்பாரை ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர்.
மேலும், சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, லால்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி, கயிற்றில் கட்டி இரண்டு சடலங்களையும் மீட்டனர்.
அப்போது, மீட்கப்பட்ட சடலங்களில் ஒரு சடலத்தின் தலை இல்லாமல் இருந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் கிணற்றுக்குள் தலையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும், இரவு நேரமாகிவிட்டதாலும், கிணற்றில் 5 அடி ஆழத்திற்குத் தண்ணீர் இருந்ததாலும் துர்நாற்றம் அதிகமாக வீசியதாலும் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதையடுத்து, மீட்கப்பட்ட உடல்கள் மட்டும் பிரேதப் பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட செல்போன் மற்றும் ஆடைகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், கடந்த மே 9-ம் தேதி லால்குடி காவல் நிலையத்தில் இரண்டு நபர்கள் காணாமல் போனதாகப் பதிவான வழக்குடன் இது ஒத்துப்போனது.