"அதிமுக-விலுள்ள 60 சதவிகிதம் பேர் தவெக-விற்கு வந்துவிட்டார்கள்'' – சொல்கிறார் புகழேந்தி

Spread the love

“முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் இன்னும் பல அதிமுக-வினர் தவெக-வில் இணைய வருவார்கள் என நம்புகிறேன்” என்று அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவிலிருந்து விலகி தவெக-வில் இணைந்த வ.புகழேந்தி தெரிவித்துள்ளார்.

புகழேந்தி
புகழேந்தி

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “சந்தர்ப்பவாதிகள், துரோகிகள், ஓடுகாலிகள் ஓடுகிறார்கள் என்று உத்தமபுத்திரர்போல கே.பி.முனுசாமி பேசுகிறார். எவ்வளவு பேர்தான் ஓடுவது? அதிமுக-வை விட்டு வெளியே ஓடுபவர்களைத் தடுக்கிறீர்களா?

நீங்கள் எந்த வார்த்தையைப் பயன்படுத்தினாலும் எடப்பாடி பழனிசாமி பின்னால் ஓடுகாலிகள் மட்டுமல்ல, யாருமே இருக்க மாட்டார்கள், கூடாரம் காலி.

நீங்களும்தான் ஓபிஎஸ் பக்கமும், பிறகு ஈபிஎஸ் பக்கமும் இருந்தீர்கள், அதற்கு முன் எங்கே இருந்தீர்கள் என்பது தெரியும். ஓடிப்போய் புஸ்ஸி ஆனந்தைத்தான் பார்க்க முடியும் என்று முனுசாமி சொல்கிறார். அமைச்சரான அவர் தவெக-வில் இரண்டாம் கட்டத் தலைவர்.

எல்லோரையும் அரவணைத்து செல்பவர், 30 ஆண்டுகளாக ரசிகர்களைக் கட்டுப்பாட்டில் வைத்து, இந்த ஆட்சி அமைந்ததில் அவருக்கும் பங்கு உண்டு. அவரையும் ஆதவ் அர்ஜுனாவையும் கேள்வி கேட்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஏற்கனவே வெற்றிபெற்ற தொகுதியில் உங்களால் வெற்றி பெற முடிந்ததா?

புகழேந்தி - விஜய்
புகழேந்தி – விஜய்

நாங்கள் முதல்வரைப் பார்த்தோம், எல்லோருமே பார்த்தார்கள், அதிமுகவிலிருந்தும் அனைத்துக் கட்சிகளிலிருந்தும் வற்றாத ஜீவ நதியான தவெக-வில் இணைய வந்து கொண்டிருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியை நம்பிச் சென்றவர்கள், இன்று அநாதையாக நிற்கின்றனர். அவர்களை ஆதரிக்கின்ற இயக்கமாக தவெக இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், எடப்பாடி பழனிசாமியைச் சுற்றி நான்கு சகுனிகள் இருக்கிறார்கள்.

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சித்தது என்ற தகவலை எடப்பாடி பழனிசாமி ஏன் இன்னும் மறுக்கவில்லை.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 25 பேர் தவெக-வுக்கு ஆதரவு தந்தார்கள். அவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக தவெக-விற்கு வருவார்கள். இப்போதும் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். இதை முனுசாமி புரிந்துகொள்ள வேண்டும், நீங்கள் கூட அப்ளிகேஷன் போடலாம்.

அதிமுக-விலுள்ள 60 சதவிகிதம் பேர் தவெக-விற்கு வந்துவிட்டார்கள். மீதமுள்ளவர்களும் இடைத்தேர்தலுக்கு முன் வந்துவிடுவார்கள். இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற முடியுமா? தவெக தங்கம், அதிமுக தகரம்.

முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் இன்னும் பல சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் தவெக-விற்கு வருவார்கள் என நம்புகிறேன்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *