திருச்சி, பொன் நகர் புது செல்வா நகரைச் சேர்ந்தவர் சால்மன் பார்ஷ் (வயது: 37). இவர், கடந்த 17 -ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்ள சென்னை சர்வதேச விமான நிலையம் சென்றார். அங்கு, அவரது உடமைகளை குடியேற்ற பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தபோது, அவர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் தனது வாக்கை செலுத்தியது தெரியவந்தது. மேலும், அவர் வெளிநாட்டில் குடியுரிமை வைத்துள்ளவர் என்பதும் தெரிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இது குறித்து, சென்னை பெருநகர போலீஸார் வழக்கு பதியவில்லை. இது சம்பந்தமாக திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலைய போலீஸார் சால்மன் பார்ஷ் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல், திருச்சி தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சனி வைத்தீஸ்வரன் (வயது: 59). இவர், கடந்த பத்தாம் தேதி வெளிநாடு செல்ல சென்னை விமான நிலையம் சென்றார். அங்கு குடியேற்ற பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர் வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ளதும், அவர் திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தனது வாக்கை செலுத்தியதும் தெரியவந்தது. இது குறித்து குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் திருச்சி தில்லை நகர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மேற்கு தொகுதியில் நடந்து முடித்த சட்டமன்றத் தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ள இருவர் வாக்களித்த விவகாரம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.