திருச்சி, பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமி, தாய் தந்தை, இருவரும் பிரிந்த நிலையில் அவரது உறவினர்கள் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி காணாமல் போய் உள்ளார். இது குறித்து, இந்த சிறுமியின் உறவினர்கள் பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரியின் அடிப்படையில் அவரை போலீஸார் தேடி வந்த நிலையில் அந்த சிறுமியை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அந்த சிறுமியை அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைத்தபோது, அவர்களுடன் செல்ல தனக்கு விருப்பமில்லை என அந்த சிறுமி தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து, அந்த சிறுமியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். அந்த காப்பகத்திற்கு சென்ற சிறுமியை அங்கிருந்தவர்கள் விசாரித்தபோது சிலர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் அவர்கள் குழந்தைகள் நலத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சென்று விசாரித்து இது குறித்து கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீஸார் அந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மோகன்ராஜ் கிஷோர் மற்றும் ஏழு சிறுவர்கள் என ஒன்பது பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை காரில் அழைத்து சென்று கார் ஓட்டுநர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த இரண்டு நாள்களில் திருச்சியில் நடந்த இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.