திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி ஜாப்ராபாத் பகுதியைச் சேர்ந்த 24 வயதாகும் திருநங்கை பூமிகா. இவரும், கோனாமேடு பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் வல்லரசு என்பவரும் காதலித்து, ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.
எந்த வேலைக்கும் செல்லாத வல்லரசு ஊர் சுற்றுவதற்காக பைக் வாங்கிக்கொடுத்து, தினமும் செலவுக்கு பணமும் கொடுத்திருக்கிறார் திருநங்கை பூமிகா.
இந்த நிலையில், சமீபகாலமாக ஒரு பெண்ணுடன் வல்லரசு தொடர்பிலிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம், பூமிகாவுக்குத் தெரியவந்ததையடுத்து, வல்லரசுடன் அவர் சண்டைப் போட்டிருக்கிறார்.
இருவருக்கும் இடையேயான தகராறு அதிகமானதால், பூமிகா விலகி இருந்திருக்கிறார். ஆனாலும், பூமிகாவிடம் தொந்தரவில் ஈடுபட்டு வந்திருக்கிறார் வல்லரசு.

இந்த நிலையில்தான் 26-ம் தேதி இரவு பூமிகாவுக்குப் போன் செய்த வல்லரசு, `நேர்ல பேசணும் வா’ என்றுகூறி ஒரு வீட்டுமனை பகுதிக்கு அழைத்திருக்கிறார். திருநங்கை பூமிகாவும் தனியாகச் சென்றார். அங்கு மது குடித்துக்கொண்டிருந்த வல்லரசு ஆத்திரப்பட்டு பூமிகாவைத் தாக்கியிருக்கிறார்.
தகாத வார்த்தைகளால் கடுமையாகப் பேசி, மதுபாட்டிலை உடைத்து குத்தியிருக்கிறார். இதில், பூமிகாவுக்கு தாடைப் பகுதி கிழிந்து ரத்தம் கொட்டியது. பலத்த காயமடைந்த அவர் கதறித் துடித்ததால், வல்லரசு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.