த.வெ.கவின் அழைப்பை ஏற்று அமைச்சரவையில் இடம்பெறுவதாக ஐயூஎம்எல் கட்சி தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” நாங்கள் த.வெ.கவிற்கு ஆதரவு தெரிவித்தபோது எந்த நிபந்தனையும் அவர்களிடம் வைக்கவில்லை.
ஆனால் விஜய் தலைமையிலான புதிய த.வெ.க அரசு பெருந்தன்மையுடன் அமைச்சரவையில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்கள்.
எங்களின் இரண்டு எம்எல்ஏக்களில் ஒரு எம்எல்ஏவுக்கு அமைச்சரவையில் இடம் தருகிறோம் அதற்கு உங்கள் ஒப்புதல் வேண்டும் என்று கேட்டனர்.

இது எங்களுக்கு எதிர்பாராத ஒரு செய்தி. நாங்கள் கேட்கவும் இல்லை, கோரிக்கை வைக்கவும் இல்லை.
பெருந்தன்மையோடு எங்களை அழைத்ததற்கு நன்றி. எல்லோரிடமும் கலந்து பேசி த.வெ.க அமைச்சரவையில் பங்கேற்கிறோம்.
இரண்டு எம்எல்ஏக்களில் பாபநாசம் எம்எல்ஏ ஷாஜகான் அவர்களை அமைச்சரவையில் இடம்பெற தேர்வு செய்திருக்கிறோம். விஜய்யின் நல்லாட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம் ” என்று தெரிவித்திருக்கிறார்.