இதுபற்றி கூட்டத்தில் பேசிய ஆவணப்பட இயக்குநர்கள் தமிழ்தாசன் மற்றும் தவம் ஆகியோர்,
“நாங்கள் ஒன்றும் சினிமா பின்னணி கொண்டவர்கள் அல்ல; எங்களுக்குப் படம் எடுத்த அனுபவமும் கிடையாது. ஆனால், திருப்பரங்குன்றத்தைச் சுற்றி திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளையும், கட்டுக்கதைகளையும் உடைத்து, உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில்தான் இந்த ஆவணப்படத்தை உருவாக்கினோம்.
வெறும் எழுத்து வடிவில் சொல்வதை விட, காட்சிப் பதிவாக கொண்டு சென்றால் தான் மக்களிடம் வேகமாகச் சேரும். இதற்காகக் கிட்டத்தட்ட 40 மணி நேரக் காட்சிகள் (Footage) எடுத்தோம். அதைச் சுருக்கிச் சுருக்கி, தற்போது 1 மணி நேரம் 17 நிமிடங்கள் கொண்ட ஆவணப்படமாக மாற்றியுள்ளோம். இதற்குப் பின்னால் பலரின் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது.” என்றார்.
தொடர்ந்து பேசிய தமிழ்தாசன், “சட்டப்படி இந்த மலை யாருக்குச் சொந்தம் என்று நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சொல்லவே நாங்கள் கேமராவுடன் களமிறங்கினோம். ஆனால், அதற்குப் பின்னால் இருக்கும் நீண்ட கால அரசியல் திட்டங்களைக் கண்டு அதிர்ந்துபோனோம். திருப்பரங்குன்றத்தில் சில முக்கியப் பிரச்சினைகளைச் சில அரசியல் சக்திகள் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்:
இவை அனைத்தும் தற்செயலாக நடப்பவை அல்ல, குறிப்பிட்ட அரசியல் நோக்கத்திற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கதைகள். இதைத்தான் எங்கள் படம் அட்ரஸ் செய்கிறது!” என்றார் ஆவேசமாக.
திருப்பரங்குன்றத்தின் நிஜமான நிலவரம் குறித்துப் பேசிய இயக்குநர் தமிழ்தாசன்
“அயோத்தியில் உள்ளூர் மக்களின் ஆதரவு கிடைக்காததால்தான், வெளியூர் ஆட்களைக் கொண்டு வந்து ஒரு பிரச்சினையைப் பெரிய விஷயமாக்கினார்கள். அதேபோலத்தான் திருப்பரங்குன்றத்திலும் நடக்கிறது. உள்ளூர் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்; அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. வெளியூர் ஆட்கள்தான் வந்து பிரச்சினையைத் தூண்டுகிறார்கள்.
ஏற்கனவே வெளியான ‘கந்தன் மலை’ என்ற படம் யூ டியூப்பில் 10 லட்சம் வியூஸ்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. 1996-ல் அங்கிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் வலுவான கிளையை எதிர்த்து தோழர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட இடதுசாரிகள் போராடினார்கள். ஆனால், இன்று புதிய தலைமுறையிடம் இடதுசாரி அரசியல் களம் பின்னடைவைச் சந்தித்துள்ளதால், அங்கு இயக்கங்களை முன்னெடுக்க ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைச் சில சக்திகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
சிறுபான்மையினராக இருக்கும் 3% மக்கள் பெரும்பான்மையினருடன் இணைந்து போவதை விட, 97% இருக்கும் பெரும்பான்மை இந்து மக்கள் அந்த 3% சிறுபான்மையினரை எப்படித் தங்களின் அண்ணன், தம்பியாக ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக நடத்துகிறார்கள் என்பதுதான் தமிழ்நாட்டின் நிஜமான மத நல்லிணக்கம்.
கிராமப்புறத் திருவிழாக்களில் இஸ்லாமியர்களுக்குக் கோயில் சார்பில் முதல் மரியாதை மற்றும் பரிவட்டம் கட்டும் வழக்கங்கள் இன்றும் உள்ளன. மதுரையில் ஊரை விட்டுச் சென்ற இஸ்லாமியர்களை மீண்டும் மேளதாளத்துடன் அழைத்து வந்து முதல் மரியாதை செய்யும் சான்றுகளை எங்கள் படத்தில் காட்டியிருக்கிறோம்.
பணம் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆவணப்படத்திற்குத் தேவையான பொருளாதார உதவியில் 90% வழங்கியது இந்துக்கள் தான். இந்த நிஜமான மதநல்லிணக்க மரபைத்தான் காவல்துறை திரையிடக் கூடாது என்று தடுக்கிறது!” என்று குமுறினார்.