திருப்பூர் மாவட்டம், கருமாரபாளையம் அருகில் உள்ள மூகாம்பிகை நகரில் ஒரு வீட்டில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். தகவலின் அடிப்படையில் அந்த வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர், உள்பக்கம் தாழிடப்பட்ட வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அழுகிய நிலையில் பெண்ணின் சடலமும், அருகில் தற்கொலை செய்து கொண்ட ஆண் ஒருவரின் சடலமும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 27 வயதான சரவணன் அவரின் 20 வயதான அவரின் மனைவி ஸ்ரீமதி ஆகியோரின் சடலம் என்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் 4 மாத கர்ப்பிணியாக இருந்த ஸ்ரீமதியை கொலைசெய்த கணவன் சரவணன், அந்த கொலையை மறைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதையும் கண்டறிந்துள்ளனர்.

இந்த அதிர்ச்சி பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், “காதல் திருமணம் செய்து கொண்ட இருவரும் இந்த பகுதியில் 5 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கருவுற்றிருந்த செவிலியர் ஸ்ரீமதி வேலைக்கு செல்ல முடியாமல் இருந்திருக்கிறார். மது பழக்கத்திற்கு அடிமையான சரவணன் முறையாக வேலைக்கு செல்லாததால் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. மனைவி மீது சந்தேகம் கொண்ட சரவணன், சில தினங்களுக்கு முன்பு அவரை கடுமையாக தாக்கி கொலை செய்திருக்கிறார். கொலையை மறைக்க பல்வேறு முயற்சிகளை செய்திருக்கிறார். ஆனால், முடியவில்லை. அந்த பயத்தில் தானும் தற்கொலை செய்து உயிரை மாய்த்திருக்கிறார். காதலித்து வாழ்வை சந்தோஷமாக தொடங்கிய இருவரின் வாழ்க்கையும் சோகத்தில் முடிந்திருக்கிறது. தொடர் விசாரணை மற்றும் உடற்கூறாய்வு முடிவுகளுக்குப் பிறகு மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் ” என்றனர்.