கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் விசிக சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டின்போது மேடை பகுதியில் திடீரென அதிகளவில் கூட்டம் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், விசிகவின் செங்கல்பட்டு ஆவண மைய மாவட்ட அமைப்பாளர் ராஜா தலைமையிலான கட்சியினர் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜா, மாநாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் இயற்கையானது அல்ல என்றும், சிலர் திட்டமிட்டு பல நூறு பேரை ஒரே நேரத்தில் மேடைக்கு அழைத்து வந்து செயற்கையான நெரிசலை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்தார்.
மேலும், நெரிசலின்போது விசிக தலைவர் திருமாவளவனை தாக்கும் நோக்கில் முகம் தெரியாத சிலர் செயல்பட்டதாகவும், அதுதொடர்பான வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாகவும் ராஜா தெரிவித்தார்.
திருமாவளவனை தாக்கும் நோக்கில் திட்டமிட்டு கூட்ட நெரிசல் ஏற்படுத்தப்பட்டதாக விசிக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

