திருவண்ணாமலையில் ஆனி மாத சனி மகா பிரதோஷம் வழிபாடு! – Kumudam

Spread the love

உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் 5-ம் பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் அருகே அமைந்துள்ளது பெரிய நந்தி. நந்தி பகவானுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷ தினத்தன்று அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும்.

அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள பெரிய நந்தியம் பெருமானுக்கு ஆனி மாத சனி மகா பிரதோஷ தினமான இன்று (ஜுன் 27) பிரதோஷம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

ஆனி மாத சனி மகா பிரதோஷ தினத்தை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள நந்தியம்பெருமானுக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேக தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், கிலோ விபூதி, லிட்டர் பால் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து அருகம்புல், கனகாம்பரம், சாமந்தி, மல்லி ஆகிய பூக்களினால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பான முறையில் ஆராதனை நடைபெற்றது.

ஆனி மாத சனி மகா பிரதோஷ தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டும், சங்கொலி முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

பிரதோஷ தினத்தின் போது நந்தியம்பெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் உண்டாகும், குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

ஆகவே ஆனி மாத சனி மகா பிரதோஷமான தினமான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் திருக்கோவில் வல்லாள மகாராஜா கோபுரம் அருகில் உள்ள நந்தியம்பெருமானை சாமி தரிசனம் செய்தார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *