நேற்று (ஜூன் 21, 2026) திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.
இதனால், அங்கு வேலை செய்துகொண்டிருந்த 60-க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். சிலருக்கு வாய், மூக்கில் ரத்தமும் வந்துள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நான்கு பேர் உயிரிழப்பு: சிகிச்சைக்குப் பலனளிக்காமல் நேற்று இரண்டு பெண்களும், இன்று இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

கைது: இந்த விபத்து காரணமாக இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையின் உரிமையாளர், மேலாளர் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைக் குழு: இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு. இவர்கள் 24 மணிநேரத்திற்குள் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நிவாரண நிதி: இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும், அரசு செலவில் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.