இந்நிலையில், திருவாரூர் அருகே இருந்த சதுர்வேதி மங்கலம் என்னும் ஊரில் இருந்து ஒரு விண்ணப்பம் வந்தது. முருகப்பெருமான் திருமேனி ஒன்று செய்ய வேண்டும். அதற்கு வழிகாட்டுங்கள் என்று கேட்டனர். சிற்பிக்குள் இருந்து முருகன் நம்பிக்கை தர, சிற்பி அந்தப் பணியை ஏற்றார். அவர் விரல்களே கண்கள் ஆகின. தொட்டுத் தொட்டு சிற்பத்தை வடித்தார்.
சிற்பங்களுக்கு கண் திறப்பதுதான் முக்கியமான வைபவம். கண் திறந்ததும் சிலையில் உயிரோட்டம் நிகழும் என்பது ஐதிகம். அப்படிக் கண் திறக்கும் முன் சிற்பி மனம் உருக வேண்டினான்.
”முருகா, என் கண்ணே! கண்ணில்லாதவன் உன்னுடைய கண்ணைத் திறக்கப் போகிறேனப்பா! இந்தத் தலத்தில் குடியேற வா, முருகா! என் உளியிலும் சுத்தியலிலும் வந்து இறங்கி, உன் கண்ணை நீயே திறந்துகொள் அழகப்பா… என் கண்ணே, வா!” என்று பிரார்த்தித்தபடியே உளி கொண்டு கண் திறந்தார்.
அடுத்த கணம், அங்கே பேரொளி ஒன்று பரவிச் சூழ்ந்தது; சிற்பியின் முகத்தில் ஒளிப்பந்து ஒன்று வந்து மோதியது. கைகளால் முகத்தை மூடியவர், மெள்ளக் கைகளை எடுத்தார். என்ன ஆச்சரியம்! தரை தெரிந்தது; அண்ணாந்து பார்த்தார்; வானம் தெரிந்தது; அருகில், அருமை மகள் தெரிந்தாள்; எதிரே முருகப் பெருமான் புன்னகைத்தார்.
நெகிழ்ந்து, நெக்குருகி இரண்டு கைகளையும் குவித்து வணங்கினார் சிற்பி. கண் ஒளி தோன்றியதுபோலவே கட்டைவிரல்களும் தோன்றிவிட்டன. ஊரார் வியந்துபோயினர்.
சிற்பிக்கு முருகப்பெருமான் அருளியதை அறிந்த மன்னனும் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்டான். பொன்னும் பொருளும் வாரிக் கொடுத்தான். அதுவரை பவித்திர மாணிக்க சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்ட அந்த ஊர், எண்ணத்தைக் கண்ணாகக் கொண்டு செயல்பட்ட சிற்பியைப் போற்றும்விதமாக ‘எண்கண்’ என அழைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது எண்கண் திருத்தலம். சிற்பிக்கு அருளிய தலம் என்பதால், இங்கு வந்து வணங்க கலை, அறிவு முதலானவற்றில் விற்பன்னராகலாம். புத்திர பாக்கியம், திருமண பாக்கியங்கள் மட்டுமின்றி சகல ஐஸ்வரியங்களையும் அள்ளித் தந்து அருள்பாலிக்கிறார் முருகப்பன். இப்படிப்பட்ட சிறப்புகளை உடைய இந்த ஆலயத்தில்
இதற்கு முன்பு இந்த ஆலயத்தில், 25.4.10 அன்று கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. தற்போது திருப்பணிகள் நடைபெற்றது சிறப்புற கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை எண்கண் முருகனைக் கண்குளிரத் தரிசியுங்கள்; உங்கள் எண்ணமெல்லாம் ஈடேறும்!