“நம் மாநில நலன், சமூகநீதி, மொழி உரிமை ஆகியவற்றில் சுதந்திரமற்ற தன்மையை உண்டாக்கி மதச்சார்பின்மை கொள்கையைச் சீர்குலைய செய்யும் நோக்கில் ஒன்றிய பி.ஜே.பி அரசு செயல்படுகிறது. அதன் பிடியிலிருந்து நமது நாட்டை மீட்க வேண்டியுள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவே, தற்போது பா.ஜ.க கூட்டத்துக்கு அடிமையாகி நம் நாட்டின் நலனை அடகு வைக்கிறார்கள்.
மதச்சார்பற்ற இந்தியாவைக் காக்கவும், மாநில உரிமைகளை வென்றெடுக்கவும் களத்தில் நிற்கும் தி.மு.க தலைமையிலான கூட்டணியே இன்று தமிழகத்தைக் காக்கும் அரணாக உள்ளது” என்கிறார் தி.நகர் தொகுதி தி.மு.க வேட்பாளர் ராஜா அன்பழகன்.

அவரிடம் நாம் மேலும் சில கேள்விகளை எழுப்பினோம்.
திராவிட மாடல் அரசின் எந்தச் சாதனைகள் முன்வைத்து பிரசாரம் செய்கிறீர்கள்?
தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கி பொருளாதார சமத்துவத்தை நிலைநாட்டியது.
அரசுப் பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணம்.
பள்ளி மாணவர்களின் பசி போக்கி கல்வி கற்பதை உறுதி செய்த புரட்சிகர காலை உணவுத் திட்டம்.
புதுமைப் பெண் & தமிழ்ப் புதல்வன்- கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை.
வீட்டு வாசலுக்கே தேடி வரும் மக்களைத் தேடி மருத்துவம்.
தி.மு.க ஆட்சியில் தி.நகர் தொகுதிக்குக் கிடைத்த பலன்கள் என்ன?
தியாகராய நகரில் மக்கள் பயன் பெறும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் உஸ்மான் சாலை மேம்பாலம் புதுப்பிக்கப்பட்டு, இருசக்கர வாகன நிறுத்த வசதி மற்றும் சாலையோர வியாபாரிகள் பாதிப்பின்றி வியாபாரம் செய்ய வழிவகை செய்யப்பட்டது.
மழைநீர் வடிகால்: பகுதி முழுவதும் மழைநீர் வடிகால் சிறப்பாக அமைக்கப்பட்டது. பள்ளியில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தி.நகர் தொகுதிக்குச் செய்ய உள்ள திட்டங்கள் என்னென்ன?
ஆறு அம்ச சிறப்புத் திட்டங்களை தி.நகர் தொகுதிக்கு வடிவமைத்துள்ளோம். நவீன வசதிகள் கொண்ட தி.நகர் பேருந்து நிலையம் அமைதல். குடிநீர் ஆதாரம் உறுதி செய்திட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்தல். தொகுதி மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் இலவச கணினி மற்றும் நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள், தி.நகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணியை விரிவுபடுத்தி, மழை நீர் தேங்கா வண்ணம் சீர்படுத்துதல்.
மேற்கு மாம்பலம் பகுதியில் மூத்த குடிமக்கள் பயன் பெறும் வகையில் மருத்துவ நிலையம் மற்றும் டயாலிசிஸ் சென்டர், தனியார் நிறுவனங்கள் உதவியுடன் மக்கள் இலவசமாகப் பயன்பெறும் வகையில் அமைக்கப்படும்.
தி.நகர் பகுதியில் நவீன முறையில் நான்கு சக்கரம் மற்றும் இரு சக்கர வாகன பார்க்கிங் வசதிகள் செய்து தரப்படும். அதோடு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பயன்பாடுகள் மக்களுக்கு முழுமையாகக் கிடைத்திடும் வகையில் செயல்திட்டத்தைச் செயல்படுத்துவேன்” என்கிறார்.