“தி.மு.க. தொழிலதிபர்களுக்கு குறி ?” – அமைச்சர் விஜயலட்சுமியை சுற்றும் அதிரடி சர்ச்சை ! – Kumudam

Spread the love

‘ஆய்வு என்கிற பெயரில் கட்சிக்காரர்களுடன் சென்று சாய ஆலைகளில், பூட்டை உடைப்பது, பொருட்களை உடைப்பது என்று அத்துமீறுகிறார் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி” என்று புகார் வாசிக்கிறார்கள் சாய ஆலை உரிமையாளர்கள். மறுபுறம், ‘காவிரி ஆற்றில் கலக்கும் சாய ஆலைக் கழிவுகள் தொடர்பான அமைச்சரின் நியாயமான ஆய்வை, பொய் புகார் சொல்லி தடுக்கிறார்கள்’ என்று குமுறும் த.வெ.க.வினரால் தடதடக்கிறது நாமக்கல் மாவட்ட நிர்வாகம்!

நாமக்கல் மாவட்ட எல்லையான காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய ஊர்களில் நெசவுத் தொழில்தான் பிரதானம். இவற்றின் உபதொழிலான சாய ஆலைகளும் பெரியளவில் இங்கு செயல்பட்டுவருகின்றன. இங்கு நூல்களுக்கு வண்ணம் ஏற்றிய பிறகு வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவுநீரை முறையாக சுத்திகரித்து வெளியேற்றாமல், நச்சுத் தன்மையோடு காவிரி ஆற்றில் கலந்துவிடுவதாக பல ஆண்டுகளாக புகார் உள்ளது.

தற்போது த.வெ.க. ஆட்சி அமைந்துள்ள நிலையில் குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏவும் பால்வளத்துறை அமைச்சருமான விஜயலட்சுமி, கெமிக்கல் தண்ணீரை சுத்திகரித்து அனுப்பாத ஆலைகளில் அதிரடியாக ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருவதுதான் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது. இதுபற்றிய விஷயமறிந்தவர்களிடம் பேசினோம். “பள்ளிபாளையம் காவிரி ஆத்துல ஈஸியா சாயத் தண்ணிய கலந்துவிட்டுடறாங்க.

இதனால் ஆத்துத் தண்ணி கெமிக்கலாகி அதைக் குடிக்கிற மக்களுக்கு பலவித நோய்கள் வருது. குறிப்பா, புற்றுநோய் அதிகமா வருது. மக்களுக்கு வேற வழியில்லைங்கிறதால, இந்த காவிரி தண்ணியத்தான் தொடர்ந்து குடிக்கிறாங்க. பள்ளிபாளையத்தை சுத்தி சிறுசும், பெருசுமா 100 சாயப்பட்டறைங்க இருக்கு. அவங்க எல்லாமே சாயத் தண்ணிய காவிரி ஆத்துலதான் கலந்துவிடுறாங்க.

த.வெ.க. ஆட்சிக்கு வந்து, குமாரபாளையம் எம்.எல்.ஏ விஜயலட்சுமி அமைச்சர் பதவி ஏத்த பத்தாவது நாள்ல ஆய்வு செஞ்ச முதல் இடமே சாயபட்டறைங்கதான். அன்னைக்கு வந்து அவங்க, நச்சுத் தண்ணியை சுத்திகரிக்காம விட்ட 22 ஆலைகளுக்கு சீல் வச்சாங்க, அதுக்கப்புறமா, அமைச்சர் விஜயலட்சுமி தரப்பை சாயபட்டறைக்காரங்க போய் சந்திச்சு, டீல் பேசுனதாகவும், அமைச்சர் தரப்பு ஸ்ட்ரிக்ட்டா மறுத்து, ‘சுத்தமா தொழில செஞ்சுக்கோங்க. எனக்கு எதுவும் வேணாம்’ அப்படின்னு சொல்லிட்டதாகவும் சொல்லப்படுது.

ஆனாலும், லோக்கல் தவெ.க.காரங்க மூலமா, சாய ஆலை சங்கத்துக்காரங்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்காங்க. அதுல சில விஷயங்கள் ஒத்துப்போயிருக்கும்போல.. பெரிய சாய ஆலை முதலாளிங்க பழைய மாதிரியே ஆலையை இயக்குறாங்க. இதுல வெற்றிவேல், பி.ஆர்.எம். பரசுராமன் போன்ற முக்கியமான ஆறு சாய ஆலைங்களை, போன தி.மு.க. ஆட்சியில புகார் வருதுன்னு சொல்லி கரண்ட் கட் செஞ்சிட்டாங்க. ஆனாலும், வெற்றிவேல் ஆலை ஓனர் மாதேஸ் ரகசியமா பகல் நேரத்தில ஆலையை இயக்கிக்கிட்டுத்தான் இருந்தார். இதை த.வெ.க. ஆளுங்க மோப்பம் பிடிச்சுட்டாங்க.

உடனே ஜூலை 31ம் தேதி, சென்னையிலிருந்து அமைச்சர் விஜயலட்சுமி ஊருக்கு வந்ததும், நைட் 9 மணி வாக்குல, கட்சிக்காரங்களைக் கூட்டிக்கிட்டு, அந்த ஆலைக்குப் போய்ட்டாங்க. அதிகாரிகள் யாரும் கூட வரலை. கட்சிக்காரங்களே ஆலையோட பூட்டை உடைச்சு அமைச்சருக்கு வழி செஞ்சுக் கொடுக்க, உள்ளே போய் ஆய்வு செஞ்சாங்க. ஆனா, கட்சிக்காரங்க கல்லை எடுத்து ஆலை கதவை உடைச்சது சர்ச்சையாயிடுச்சு. குறிப்பிட்ட சாய ஆலையை மின்சாரம் கட்டாம பகலிலேயே இயக்கியிருக்காங்க. ஆலை இயங்கறப்போ போய் பிடிக்காமல், இரவு நேரத்துல போய் அட்ராசிட்டி செய்யலாமா?

முன்னாள் அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள், சாய ஆலை சங்கப் பொறுப்புல இருக்குறவங்களோட ஆலைகள் எல்லாத்தையுமே அமைச்சர் இதே மாதிரி அதிரடி ஆய்வு செய்யணும் அங்கேயெல்லாம் ஏன் ஆய்வு செய்றதில்லை? இங்க இருக்குற பெரிய பேப்பர் கம்பெனி ஒண்ணும் காவிரியில கெமிக்கல் தண்ணிய கலக்குறாங்கன்னு புகார் இருக்கு. அதை ஏன் ஆய்வு செய்யுறதில்ல? எல்லாமே டீலீங். அதான் பெரிய ஆலைகளுக்கு அமைச்சர் போகறதில்லை” என்று சொல்லி முடித்தார்கள்.

உள்ளூர் சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம். “சாய ஆலை வெச்சிருக்குற உரிமையாளர்கள் கட்சிகளுக்கு லஞ்சம் கொடுத்து, ஊருக்குள்ள காவிரி குடிதண்ணீர் பைப் சப்ளை வேலை நடக்குறப்பவே எக்ஸ்ட்ரா பைப் கனெக்ஷனை ரகசியமா போட்டு சாய ஆலை தண்ணீர் காவிரியில கலக்குற மாதிரி செட் செஞ்சுக்கிட்டாங்கன்னு ஒரு தகவல் இருக்கு ரகசியமான வழித்தடத்துல பைப் வழியா தண்ணீர் போறதால அதை கண்டுபிடிக்க முடியாதுன்னு சொல்றாங்க” என்றார்கள்.

இதுகுறித்து, சாய ஆலைகள் சங்கத் தலைவர் கந்தசாமியிடம் பேசினோம். “சுத்திகரிப்பு மெஷின்கள் போட்டு ஓட்டிக்கிட்டு இருக்கோம். த.வெ.க.வினர் எங்க ஆலைகளையும்தான் கவனிச்சுக்கிட்டு இருக்காங்க. ஆய்வுல மின்சாரம் துண்டிக்கப்பட்ட ஆலைகளும் மீண்டும் இயங்கும். யூகமா பேசுறதுக்கு வேலையில்லை” என்றார். அமைச்சர் ஆய்வு செய்த ஆலை உரிமையாளர் மாதேஷிடம் கேட்டதற்கு “ஒண்ணுமில்லைங்க” என்றார் ஒரே வார்த்தையில்.

அமைச்சர் விஜயலட்சுமியை தொடர்புகொண்டபோது லைன் கிடைக்காமல், அவரது உதவியாளர் சிவாவிடம் பேசினோம். “எந்த டீலிங்கும் நடக்கலை. அமைச்சர் எல்லா சாய ஆலைகளையும் ஆய்வு செய்கிறார். பிடிக்காதவர்கள் எதையாவது பேசுவார்கள். சில ஆலைகள் பல வருடங்களுக்கு முன்னாடியே ரகசியக் குழாய் வழியாக ஆற்றுக்குள் சாய கெமிக்கல் தண்ணீர் போகிற மாதிரி செய்திருப்பதாக சொல்வது உண்மை மாதிரிதான் தெரிகிறது.

பல வருடங்களுக்கு முன் போடப்பட்ட அந்த ரகசிய வழியை கண்டிபிடிக்கிறது கஷ்டமாக இருக்கிறது” என்றார். காவிரி ஆற்றை சுத்தமாக்குவதிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதிலும் சமரசமே கூடாது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *