தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் சட்டத் திருத்த முயற்சியைக் கடுமையாக விமர்சித்தும், மாநில உரிமைகளைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர், ” தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை சேர்ப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் 5 பேர் கொண்ட தேடல் குழுவை அமைப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், அதற்காக பல்கலைக்கழகங்களின் சட்டத்தை திருத்த முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசின் உரிமைகளை தாரை வார்க்கும் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த சர்ச்சையில் தமிழக அரசின் முடிவை விமர்சித்து கடந்த 8-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழ்நாட்டில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கு தனித்தனிச் சட்டங்கள் உள்ள நிலையில், அதனடிப்படையில் மட்டும் தான் அமைக்க முடியும். அரசின் பிரதிநிதி, ஆளுனரின் பிரதிநிதி, பல்கலைக்கழக பிரதிநிதி என மூவரை மட்டுமே தேர்வுக் குழுவில் சேர்க்க பல்கலைக்கழக சட்டங்களில் வகை செய்யப்பட்டுள்ளது.