ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான செல்வக்குமார் பெருந்துறை அருகில் உள்ள ஈங்கூர் பகுதியில் பழைய இரும்பு வியாபார கடை நடத்தி வருகிறார். வேறு சில தொழில்களும் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வணிக பரிவர்த்தனைகள் தொடர்பாக ஜி.எஸ்.டி செலுத்தாமல் வந்திருக்கிறார். இது குறித்து கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பு தராமல் அங்கிருந்து சென்றிருக்கிறார் செந்தில்குமார்.

தொடர்ந்து நடைப்பெற்ற சோதனையில் இரும்பு குடோனில் இருந்து 15 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். அருகில் உள்ள அவரின் வீட்டை அவசர அவசரமாக சிலர் பூட்டிவிட்டுச் செல்வதைக் கண்ட அதிகாரிகள், காவல்துறையினர் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேச் சென்று சோதனை நடத்தியிருக்கிறார்கள்.
அப்போது வீட்டுக்குள் கட்டுக்கட்டாக பணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜி.எஸ்.டி அதிகாரிகள், வருமானவரித்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு செல்வக்குமார் வீட்டில் வைத்தே பணத்தை எண்ணியுள்ளனர். இதில் 8 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணத்தை பறிமுதல் செய்ததுடன், அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.