வாலி, `கள்ள ஆண்டவரே” என்று அழைத்ததால் இங்கே ராமரைக் கள்ள ஆண்டவர் என்றே அழைத்தனர் பக்தர்கள். அதுவே மருவி, `கள்ளவாண்டர்’ என்றானது. இங்கு கள்ளவாண்டருக்கும், கிருஷ்ணருக்கும், சிவனுக்கும், அனுமனுக்கும் பீடங்கள் எழுப்பப் பட்டு வழிபடப்பட்டனர்.
பிற்காலத்தில் இங்கிருந்து பிடிமண் எடுத்துச் சென்று முத்தாலங்குறிச்சி, நடுவக்குறிச்சி, ஆறாம் பண்ணை, ஆதிச்சநல்லூர், கருங்குளம், அரசர்குளம், வல்லக்குளம், தீராத்திகுளம், ஸ்ரீபராசங்குநல்லூர், ஸ்ரீராமன்குளம் போன்ற பல ஊர்களிலும் கள்ளவாண்ட சுவாமி கோயில்கள் கட்டப்பட்டன.
ஆனால் ஆதிக் கோயில் மணக்கரைக் கோயில்தான். இந்தப் பகுதியில் பலருக்கும் கள்ளவாண்டர், கள்ளராமர் என்ற பெயர்கள் வைக்கப் படுகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் அருகில் உள்ள அரசர்குளம் கிராம ஆலயத்தில்தான் சித்திரை மாதம் கோலாகலமாகத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுதான் வேட்டைப் பானை வைபவம். பெரிய மண் பானைகளை வைத்து பனை ஓலைகளால் தீ மூட்டி பச்சரிசி போட்டு கஞ்சி காய்ச்சினார்கள்.

கஞ்சி கொதித்ததும் சாமியாடி வந்து வேட்டைப்பானை போடும் நிகழ்வைத் தொடங்கிவைத்தார். சாமியாடிகள் ஒரு கட்டத்தில் கையையும் கொதிக்கும் கஞ்சிப் பானைக்குள் விட்டு கஞ்சியை அள்ளித் தலையில் ஊற்றிக் கொள்கிறார்கள்.
`எவராக இருந்தாலும் நேருக்கு நேர் நின்று போர் புரிந்து வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அறம். வாலியை மறைந்திருந்து கொன்றதற்குத் தண்டனையாக ஸ்ரீராமர் சுடுகஞ்சியை எடுத்துத் தன் மீது ஊற்றிக்கொள்கிறார்’ என்கிறார்கள் ஊர்மக்கள்.
அதிசயமாக இதுவரை வேட்டைப்பானை போடும் சாமியாடிகள் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்பட்டதில்லை. இது ஸ்ரீராமரின் அருள்தான் என்றும் கூறுகிறார்கள்.