மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன.
இதன் நேரடி விளைவாக, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்துள்ளன.
இந்த விலை உயர்வு இன்று (15-ம் தேதி, வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளது. பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த அதிரடி மாற்றத்திற்குப் பிறகு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 97.77-க்கும், டீசல் ரூ. 90.67-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 103.98-ஆகவும், டீசல் விலை ரூ. 95.50-ஆகவும் உயர்ந்துள்ளது. இதேபோல் மும்பையில் பெட்ரோல் ரூ. 106.68-க்கும், கொல்கத்தாவில் ரூ. 108.74-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மற்ற பெருநகரங்களிலும் அந்தந்த மாநில வரிகளுக்கு ஏற்ப லிட்டருக்கு ரூ. 2.83 முதல் ரூ. 3.29 வரை விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்திய இறக்குமதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுமார் 69 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், மேற்கு ஆசிய மோதலால் தற்போது அது 113 முதல் 114 டாலர் வரை எகிறியுள்ளது.
இந்த விலை ஏற்றத்தினால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையின் ஒரு பகுதியை மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 3 உயர்வு ஈடுசெய்யும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு ரூ. 2 விலை குறைப்பைத் தவிர, எரிபொருள் விலையில் பெரிய மாற்றங்கள் எதையும் மத்திய அரசு செய்யாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ. 5 முதல் ரூ. 20 வரை உயரக்கூடும் என்ற வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால், டெல்லி, உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் நேற்றிரவு முதல் வரத் தொடங்கினர்.

விலை உயர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பே தங்கள் வாகனங்களுக்கு முழுமையாக எரிபொருள் நிரப்ப பொதுமக்கள் முண்டியடித்ததால் பல இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 105 டாலருக்கு மேல் நீடிப்பதாலும், போர் சூழல் தணியாததாலும் வரும் நாட்களில் மேலும் விலை உயர்வு இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தைத் தொடர்ந்து, சர்வதேச நெருக்கடி காரணமாக CNG விலையும் கிலோவிற்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழலால் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளே இந்த விலை உயர்விற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த அதிரடி மாற்றத்தால் டெல்லியில் ஒரு கிலோ CNG விலை ரூ. 79.09-ஆகவும், மும்பையில் ரூ. 84-ஆகவும் அதிகரித்துள்ளது.
ஆட்டோக்கள், டாக்ஸிகள் மற்றும் பேருந்துகள் எனப் பெரும்பாலான பொதுப் போக்குவரத்து வாகனங்கள் CNG-யை நம்பியே இயங்குவதால், இந்த விலை உயர்வு சாமானிய மக்களின் தினசரி பயணச் செலவை நேரடியாகப் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இது நுகர்வோர் மற்றும் போக்குவரத்துத் துறையினர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு நேரடியாக விலைவாசி உயர்வில் எதிரொலிக்கும் என்பதால் பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.