தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தளவாய்புரம் வேதக் கோயில் தெருவை சேர்ந்தவர் அந்தோனிராஜ். 68 வயது நிரம்பிய விவசாயியான அவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் அரசின் நிதி உதவியுடன் வீடு கட்டி வருகிறார். அந்த நிலத்துக்கு அருகில், அதே கிராமத்தைச் சேர்ந்த பேச்சிப்பாண்டி என்பவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. அதனால் அவர், அந்தோணிராஜ் தனது நிலத்தின் ஒரு பகுதியை சேர்த்து வீடுகட்டுவதாக தகராறு செய்துள்ளார்.
இது தொடர்பாக பேச்சிப்பாண்டியின் மனைவி பசுபதி என்பவர் சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முரளிதரன் இருதரப்பினரையும் அழைத்து விசாரித்துள்ளார்.
அத்துடன், அந்தோணி ராஜை உடனடியாக கட்டுமானத்தை நிறுத்தும்படி தெரிவித்திருக்கிறார். அதை மறுத்த அந்தோணி ராஜ், தான் சர்வேயர் மூலம் முறையாக அளந்து வீடு கட்டுவதாகவும் அதில் ஏதேனும் தவறு இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். அதனால ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் முரளிதரன்,” என்னிடமே சட்டம் பேசுகிறாயா?’ எனக்கூறி அந்தோணிராஜை கன்னத்தில் அறைந்துள்ளார்.
பலரது முன்னிலையில் தன்னை இன்ஸ்பெக்டர் கன்னத்தில் அறைந்ததால் ஏற்பட்ட அவமானத்தில், மிகுந்த வருத்தத்தில் இருந்த அந்தோணி ராஜை மீண்டும் விசாரணைக்காக கடந்த 21-ம் தேதி இன்ஸ்பெக்டர் முரளிதரன் அழைத்துள்ளார். தன்னை மீண்டும் இன்ஸ்பெக்டர் அடித்து அவமானப்படுத்தக் கூடும் என நினைத்து அந்தோணி ராஜ் பயிர்களுக்கு அடிக்கும் பூச்சி மருந்தைக் குடித்துவிட்டு காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.