கருவறைக்குள் சிவாசார்யர் கற்பூர ஆரத்தி காட்டும்போது லிங்கத்தின் பின்புறம் நீண்ட சடைமுடியுடனும், அதில் மலர்கள் சூடியிருப்பதுபோலவும் சிவசைலநாதர் காட்சியளிக்க, திகைப்புடனும் சிலிர்ப்புடனும் வணங்கிய மன்னர், சிவாசார்யரிடம் மன்னிப்பு கேட்டார்.
இப்போதும் கருவறைக்குப் பின்புறம் மூன்று துவாரங்கள் உள்ளன. அபிஷேகத்தின்போது அந்தத் துவாரங்களின் வழியாக தரிசித்தால், லிங்கத்தின் பின்பகுதியில் முடிபோன்ற கோடுகள் இருப்பதைக் காணலாம்.
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் திகழும் இந்த ஆலயத்தில், ஸ்வாமியும் அம்பாளும் மேற்கு நோக்கித் தனித்தனிச் சந்நிதிகளில் காட்சியளிக்கிறார்கள். இங்குள்ள ஈசன், அத்ரி முனிவர் வழிபட்டதால் ‘அத்திரீசுவரர்’ என்றும் மன்னனுக்குச் சடையுடன் காட்சியளித்ததால் `சடையப்பர்’, ‘சடைமுடி நாதர்’ என்றும் அழைக்கப்படுகிறார். அம்பாள் பரம கல்யாணி நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.
கிழக்கு நோக்கி ஸ்ரீசைல விநாயகர், வலதுபுறம் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் சந்நிதிகளும், இடதுபுறம் வள்ளி தெய்வானையுடன் சுப்பிர மணியரும் அருள்பாலிக்கிறார்கள். சிவன் சந்நிதியின் இடப்புறம் தட்சிணாமூர்த்தியும், அம்பாள் சந்நிதியின் வலதுபுறம் சப்த கன்னியர் களும், சுற்றுப்பிராகாரத்தில் 63 நாயன்மார்களும் உள்ளனர். கொடிமரத்தின் முன்பு, முன் காலை ஊன்றி எழும் நிலையில் காட்சியளிக்கிறார் நந்திகேஸ்வரர்.
`மன்னனுக்குக் குழந்தைப்பேறு வழங்கிய தலம் என்பதால் இங்கு வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அம்பாளின் திருப்பெயர் பரமகல்யாணி. ஆகவே, திருமணத்தடைநீங்க இந்த அம்மனை வணங்குவது விசேஷம்.
இங்கு ஸ்வாமி, அம்பாளுக்கு 11 வகை திரவியங் களால் அபிஷேகம் செய்து, சிவசைலநாதருக்கு வெள்ளை வஸ்திரமும், அம்பாளுக்கு மஞ்சள் அல்லது சிவப்பு நிறப் பட்டும் சாத்தி, பிச்சி அல்லது மல்லிகைப் பூமாலை சூட்டி சர்க்கரைப்பொங்கல் சமர்ப்பித்து வழிபட்டால் வேண்டும் வரம் கிடைக்கும்’ என்கிறார்கள் பக்தர்கள்.
அம்பாள் சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ள உரலில், திருமணமாகாத பெண்கள் ஒரு கைப்பிடி விரலி மஞ்சளைப் போட்டு இடித்து அதில் ஒரு துளியை நெற்றியில் பூசிக்கொள்கிறார்கள். திருமணமான பெண்கள் மஞ்சள் இடிக்காமல் உரலில் உள்ள மஞ்சள்தூளை எடுத்துப் பூசிக்கொள்கிறார்கள். இதன் பலனாக கன்னிப்பெண்களுக்கு விரைவில் கல்யாணம் கூடிவரும், சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் வாய்க்கும் என்பது நம்பிக்கை.
இந்த வழிபாட்டையொட்டி வழங்கப்படும், ‘மஞ்சள் இடித்தால் மாங்கல்யம் கிடைக்கும்’ எனும் சொலவடை இந்தப் பகுதியில் பிரசித்தம்.
விவசாயிகள் மாடு, டிராக்டர் போன்றவை வாங்கினால் இத்தல நந்திகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து உளுந்து நைவேத்தியம் படைத்து வழிபடுகிறார்கள். இதனால் அந்தக் கால்நடைகளை எந்தப் பிணியும் அண்டாது. வாகனங்கள் எவ்வித விபத்திலும் சிக்காமலும், அடிக்கடி பழுதாகாமலும் திகழும் என்பது நம்பிக்கை. மேலும், `இத்தலத்தில் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேக வைபவம் செய்வதும் சிறப்பு’ என்கிறார்கள் பக்தர்கள்.
நெல்லைச் சீமைக்குச் செல்லும் அன்பர்கள் அவசியம் இந்தத் தலத்துக்கும் சென்று வழிபட்டு வாருங்கள்; உங்கள் வாழ்க்கை செழிக்கும்.