தென்காசி மாவட்டம், புளியறை சதாசிவமூர்த்தி: நட்சத்திரப் படிக்கட்டுகள்… தில்லைக்கு இணையான தலம்!

Spread the love

அடியார்களின் தியாகத்தால்தான் இன்றும் நம் சமயங்களும் கோயில்களும் காக்கப்பட்டுள்ளன. நாட்டில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களின்போது விக்ரக மூர்த்திகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அநேகம்.

அப்படித்தான் ஒருமுறை தில்லை நடராஜப்பெருமானின் விக்ரகத்தையும் காக்க வேண்டியசூழல் ஏற்பட்டது. அடியவர் கூட்டம் ஒன்று ஸ்ரீநடராஜரைச் சுமந்துகொண்டு பொதிகை மலை நோக்கிப் பயணித்தனர். பொதிகை வனப்பகுதிக்குள் சென்றனர்.

அப்போது ஓரிடத்தில் கருடன் மேலே வட்டமிட அவ்விடமே ஈசனின் விருப்பம் என்பதை அறிந்து அங்கேயே ஒரு புளிய மரத்தின் பொந்தினில் சுவாமியை வைத்துவிட்டு வணங்கி விடைபெற்றனர்.

புளியறை கோயில்
புளியறை கோயில்

நாள்கள் நகர்ந்தன. அந்த வனப்பகுதிக்குச் சொந்தக்காரரான சிவபக்தர் ஒருவர், மரப் பொந்தில் நடராஜப் பெருமானைக் கண்டு சிலிர்த்துப் போனார். தினமும் வந்து பெருமானுக்கு பூஜைகள் செய்து மகிழ்ந்து வந்தார்.

பல வருடங்களுக்குப் பிறகு, தில்லையில் பிரச்னைகள் தீர்ந்து சைவம் தழைக்கவும் அடியார்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த நடராஜர் சிலையைத் திரும்பவும் எடுத்துக் கொண்டு வர நினைத்து பொதிகை மலை வனப்பகுதிக்குப் புறப்பட்டு வந்தனர்.

பல ஆண்டுகள் ஆகியிருந்ததால் பாதை மாறியிருந்தது. அப்போது அவர்களுக்கு அசரீரி வழிகாட்டியது. அதைப் பின் புளியமர பொந்தில் வைத்திருந்த நடராஜர் விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு சிதம்பரம் திரும்பினர்.

இந்த நிலையில், தான் தினமும் பூஜித்து வந்த நடராஜப்பெருமானைக் காணாமல் பெரிதும் வருந்தினார் சிவபக்தர். கண்ணீர் விட்டார். அப்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது. பூமியைப் பிளந்துகொண்டு சிவலிங்கம் முளைத்தது.

சுயம்புவாய்த் தோன்றிய லிங்கத்திருமேனியைக் கண்டு அளவில்லா ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தார் சிவ பக்தர். சிவனாரைப் பலவாறு போற்றித் துதித்தார். அதற்குள்ளாக அந்தச் செய்தி ஊருக்குள்ளும் பரவியது. மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து இறைவனை வணங்கிச் சென்றனர்.

புளியறை சதாசிவமூர்த்தி கோயில்
புளியறை சதாசிவமூர்த்தி கோயில்

சேர மன்னனுக்கும் தகவல் எட்டியது. பரிவாரங்களுடன் அந்த இடத்துக்கு விஜயம் செய்தான். அகமகிழ, முகமலர சிவனாரைத் தரிசித்து வணங்கியவன், அங்கே ஆலயம் எழுப்பவும் ஆணையிட்டான். அதன்படி, சிவப்பரம்பொருளுக்கு அங்கே அழகியதொரு ஆலயம் எழும்பியது.

சதாசிவமூர்த்தி என்ற திருப்பெயருடன் ஈஸ்வரன் கோயில் கொள்ள, அம்பிகை சிவகாமி அம்மையாக எழுந்தருளினாள். புளிய மரத்தின் அறையில் (பொந்துக்குள்) ஸ்வாமியை ஒளித்துவைத்ததால், இந்தத் தலத்துக்கு புளியறை என்று பெயர் ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை, கொல்லம் நெடுஞ்சாலையில்… செங்கோட்டையிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புளியறை. இங்கே அழகியச் சூழலில் அமைந்துள்ளது ஆலயம். பின்னாளில் பாண்டியர்களும் இந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் செய்ததாக தலவரலாறு சொல்கிறது.

சுவாமியும் அம்பாளும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்க… சிவனாருக்கும் நந்திதேவருக்கும் இடையே தென்முகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீ யோக தட்சிணாமூர்த்தி. நேர்க்கோட்டில் அமர்ந்து அருள்பாலிக்கும் மூவரையும் ஏக காலத்தில் ஒரே இடத்தில் இருந்தபடி தரிசிக்கலாம் என்பது சிறப்பம்சம்!

புளியறை யோகதட்சிணாமூர்த்தி
புளியறை யோகதட்சிணாமூர்த்தி

ஸ்ரீ யோக தட்சிணாமூர்த்தியின் திருப்பாதத்தின் அருகில் சதுரக்கல் ஒன்றில் ஒன்பது ஆவர்த்த பீடங்கள் கட்டங்கள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. அத்தனை கிரகங்களும் தென்முக தெய்வத்துக்குக் கட்டுப்பட்டு இங்கே இருப்பதாக ஐதிகம்.

எனவே, இங்கே வந்து இவரை வழிபட சகல தோஷங்களும் நீங்கும்; தாலி பாக்கியம் கிட்டும், தார தோஷம் நிவர்த்தியாகும், குழந்தைப்பேறு, தொழில் வளம் முதலான சகல வரங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேலும், சிவனாருக்கு எதிரிலேயே சிவாம்சத்துடன் இந்த யோக தட்சிணாமூர்த்தி அருள்வதால், வியாழக்கிழமை மட்டுமல்லாது, அனைத்து நாள்களிலும் வந்து இவரை வழிபட்டு வரம்பெறலாம் என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

இத்தகு மகிமைகள் பலகொண்ட இந்தத் தலத்துக்கு வந்து தரிசித்துச் சென்றால் சிதம்பரத்தைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்.

இந்தக் கோயிலின் தனிச்சிறப்பு நட்சத்திரங்களே படிக்கட்டுகளாக அமைந்திருப்பதுதான். கோயிலுக்குச் செல்பவர்கள் 27 படிகளைக் கடந்துதான் கோயிலுக்குள் செல்லவேண்டும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நட்சத்திரத்தைக் குறிப்பதாம்.

அனைத்து நட்சத்திரக்காரர்களும், குருவாரமாகிய வியாழக்கிழமைகளில் இங்கு வந்து படிபூஜை செய்து, சுவாமி, அம்பாள் மற்றும் ஸ்ரீ யோக தட்சிணாமூர்த்தியை மனமுருகி வழிபட்டால், சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *