அகழாய்வில் முதுமக்கள் பயன்படுத்திய ஈமத்தாழிகள், அதிக தகரம் பூசப்பட்ட வெண்கலப் பொருட்கள், இரும்புப் பொருட்கள், சுடுமண் பொருட்கள், விளையாட்டுக் காய்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள், வட்டச் சில்லுகள், சங்கு வளையல்கள், தொங்கட்டான்கள், தக்களிகள், நுண்கற்காலக் கருவிகள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், ஈமப்பகுதியில் இரும்புக் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் சிவப்புப் பூச்சு பூசப்பட்ட பானை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் தோள் பகுதியில் தொடர்ச்சியாக மயில் உருவங்கள் வரையப்பட்டிருப்பதுடன், மூடியால் மூடப்பட்டிருந்தது ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்தப் பானையின் வெளியே மனிதப் பற்கள், கருப்பு-சிவப்பு நிற மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், அது மனிதர்களின் ஈமப்பகுதியாக இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பானைகளில் காணப்படும் கிறுக்கல் குறியீடுகள் (Graffiti Marks) அக்கால மக்களின் அடையாளக் குறியீட்டு முறையை வெளிப்படுத்தும் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது.
மலையடிப்பட்டி அகழாய்வில் தொடர்ந்து கிடைத்து வரும் கண்டுபிடிப்புகள், தென் தமிழகத்தில் சங்ககால மக்கள் வாழ்ந்த விதம், நீர் மேலாண்மை திறன், வணிக வளர்ச்சி, கட்டடக்கலை, அடக்க முறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன.
குறிப்பாக, ரோமானிய தங்க நாணயங்கள் கிடைத்த வரலாறும், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட படிக்கிணறும் இணைந்து பார்க்கும்போது, இப்பகுதி சங்ககாலத்தில் செழித்த வணிக மற்றும் குடியிருப்பு மையமாக இருந்திருக்கலாம் என்ற கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
இந்த அகழாய்வு, அகழாய்வு இயக்குநர் முனைவர் வி.பி. யத்தீஸ்குமார் மற்றும் அகழாய்வு பொறுப்பாளர் காளீஸ்வரன் ஆகியோரின் தலைமையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நடைபெறவுள்ள அகழாய்வுகளில் தமிழர் நாகரிக வரலாற்றை மாற்றியமைக்கும் பல புதிய கண்டுபிடிப்புகள் வெளிச்சத்துக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு தொல்லியல் ஆர்வலர்களிடையே அதிகரித்துள்ளது.