72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வருட தேசிய விருதுக்கான ஜூரியாக (Non-Feature Films) நடிகர் மற்றும் இயக்குநர் இ.வி.கணேஷ் பாபு சென்றிருக்கிறார். தேசிய விருதுக்குப் படங்கள் எப்படித் தேர்வு செய்யப்படுகின்றன என்பது பற்றி நம்மிடையே அவர் பகிர்ந்துகொண்டார்.
நம்மிடையே அவர் பேசுகையில், “ஜூரியாக இருந்தது மிகவும் சவாலானதாக இருந்தது. படங்களைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகக் கடினமான விஷயம். ஏனெனில், நடுவர் குழுவில் உள்ளவர்களே இந்தியா முழுவதும் உள்ள வெவ்வேறு மாநிலங்கள், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு உணர்வுகள் மற்றும் வெவ்வேறு கலாசாரப் பின்னணியைக் கொண்டவர்களாகத்தான் ஒன்றுகூடுகிறோம்.
அப்படிப்பட்ட சூழலில், அனைவரும் ஒன்றிணைந்து ஒருமித்த முடிவை எடுப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. ஒருமனதாக, ஒத்த கருத்துடைய ஒரு தீர்க்கமான முடிவிற்கு வருவது என்பது மிகப்பெரிய சவாலாகவே இருந்தது.
இதன் காரணமாகவே, சில திரைப்படங்களை நாங்கள் மீண்டும் மீண்டும் கூடப் பார்த்தோம். இந்தத் திரைப்படத்திற்கு இந்தத் தகுதி சரியாக இருக்கிறதா அல்லது அதற்கு அது சரியாகப் பொருந்துகிறதா என்பதை ஆராய்வதற்காகவே பலமுறைத் திரும்பத் திரும்பப் பார்ப்போம். இது முழுமையாக, மிக நேர்மையாக நடைபெற்ற ஒரு நிகழ்வு ஆகும்.