தேனி புதிய பேருந்து நிலையத்தில் பராமரிப்பு மற்றும் தண்ணீர் வசதியின்றி பொதுக்கழிப்பிடங்கள் காணப்படுகின்றன. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தின் முக்கியமான பேருந்து நிலையமாக தேனி புதிய பேருந்து நிலையம், முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையம் என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றது. இந்த பேருந்து நிலையமானது மாவட்டத்தின் மையப்பகுதியாக உள்ளது.
சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமன்றி, தேனி மாவட்டமானது கேரள மாநில எல்லைப் பகுதியாகவும், இயற்கை எழில்கொஞ்சும் சுற்றுலாத் தலங்கள் நிறைந்த பகுதியாகவும் இருப்பதால் அதிகமான பயணிகள் வருகை புரியும் பேருந்து நிலையமாக இது உள்ளது. ஆயிரக்கணக்கான பயணிகள் நாள்தோறும் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பேருந்து நிலையத்தில் புறநகர் செல்லும் பேருந்துகள் நிறுத்துமிடத்திலும், நகர் பேருந்துகள் நிறுத்துமிடத்திலும் பயணிகள் பயன்பாட்டிற்காக தனித்தனியே இரண்டு பொதுக் கழிவறைகள் உள்ளன. இந்தப் பொதுக் கழிவறைகளில் முறையான தண்ணீர் வசதியின்றியும் சுகாதாரமின்றியும் காணப்படுவதால், கழிவறைகளைப் பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.