
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 35 தொகுதிகளிலாவது காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என ராகுல் காந்தி விரும்பினார். இதற்காக தவெகவுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் மேலிடம் ஈடுபட்டது.
ஆனால் ப.சிதம்பரத்தை கூட்டணி பேச்சுவார்த்தைக்குள் கொண்டு வந்து, வெறும் 28 இடங்களுக்கு அகில இந்திய தலைமையை செல்வபெருந்தகை ஒப்புக்கொள்ள வைத்தார். இதில் ராகுல் காந்திக்குத் தனிப்பட்ட முறையில் பெரிய வருத்தம் உண்டு. தொடர்ந்து வேட்பாளர் தேர்விலும் தனது ஆதரவாளர்களுக்கே செல்வப்பெருந்தகை முக்கியத்துவம் கொடுத்தது பெரும் சர்ச்சையானது.
அதுமட்டுமின்றி, பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தியின் பேச்சைத் தவறாக மொழிபெயர்த்தது என செல்வப்பெருந்தகை மீது ராகுல்காந்தி கடும் கோபத்தில் உள்ளார். இதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் புதிய தலைவரை நியமிக்க டெல்லி காங்கிரஸ் தலைமை முடிவுக்கு வந்துள்ளது. மே 4-ம் தேதி தேர்தல் முடிவுக்கு பிறகு செல்வபெருந்தகைக்கு தலைவர் பதவியிலிருந்து கல்தா கொடுக்க தலைமை முடிவு செய்துவிட்டது.
ஆனால், ஏற்கெனவே மாநிலத் தலைவர் பதவியில் இல்லாத புதியவர்களை நியமிக்கவே ராகுல்காந்தி விரும்புகிறார். இதனால் தலைவர் பதவியைப் பிடிக்க கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், செல்லகுமார், ராஜேஷ்குமார் ஆகியோர் டெல்லியில் காய் நகர்த்த தொடங்கியுள்ளனர். முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.எஸ் அழகிரி, தங்கபாலு போன்றவர்களும் வாய்ப்பை எதிர்பார்த்து காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.