ஆளும் தரப்பிற்குப் பெரும் செல்வாக்குள்ள வடமாநிலங்களில், தொகுதி மறுவரையறை செய்வதன் மூலம் தங்களது அதிகாரத்தை நிரந்தரமாக்க அவர்கள் திட்டமிடுகின்றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தொகுதி மறுவரையறை என்பது மக்கள் தொகையின் அடிப்படையிலேயே செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யும் போது, மக்கள் தொகை அதிகம் கொண்ட வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரிக்கும்.
உதாரணத்திற்கு, ஒட்டுமொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 850 ஆக உயர்த்தப்பட்டு, அவை மக்கள் தொகை விகிதாச்சாரப்படி பிரிக்கப்பட்டால், வடமாநிலங்களில் மட்டுமே சுமார் 500 தொகுதிகள் வரை வந்துவிடும். ஆனால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்காது அல்லது மிகக் குறைவாகவே இருக்கும்.

இதன் மூலம், தென்மாநிலங்களின் ஆதரவே தேவையில்லாமல் வடமாநிலங்களை மட்டுமே வைத்து மத்தியில் ஆட்சியைத் தீர்மானிக்கும் நிலையை அவர்கள் அடையப் பார்க்கிறார்கள். தென்னிந்தியாவில் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்த முடியாததற்கு மற்றொரு முக்கியக் காரணம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) முறைகேடுகளை இங்கு செய்ய முடியவில்லை.