இந்தியாவில் `தொகுதி மறுவரையறை” (Delimitation) என்ற பெயரில் எதிர்காலத்தில் ஒரு பிரமாண்டமான அரசியல் மேஜிக் ஷோ நடக்கப்போகிறது.
சிறு வயதில் பள்ளியில் ஒரு லாஜிக் சொல்வார்கள், நன்றாகப் படித்து வாத்தியார் பேச்சைக் கேட்டு நடக்கும் மாணவனுக்குப் பரிசு கிடைக்கும், படிக்காதவனுக்குத் தண்டனை கிடைக்கும் என்று. ஆனால், நமது தொகுதி மறுவரையறை லாஜிக் என்னவென்றால், வகுப்பில் அமைதியாகப் படித்து, ஆசிரியர் பேச்சைக் கேட்டு நடந்த மாணவனைப் பார்த்து, “நீ ரொம்ப நல்ல பையனா இருக்கியே, அதனால உனக்கு இனிமேல் கிளாஸ் லீடர் பதவி கிடையாது. அதோ அங்க சும்மா உக்காந்து இருக்கான் பாரு அவன்தான் இனிமே லீடர்” என்று சொல்வது போலத்தான் இது!
நாம் இருவர் நமக்கு இருவர்
எழுபதுகளில் மத்திய அரசு `நாம் இருவர் நமக்கு இருவர்’ என்று சொன்னதும், தென்னிந்திய மாநிலங்கள், குறிப்பாகத் தமிழ்நாடு, அதை ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொண்டு குடும்பக் கட்டுப்பாடு செய்து மக்கள்தொகையைக் குறைத்தது. ஆனால், வட மாநில அரசுகளோ சாதுர்யமாகச் செயல்படாமல், “நாம் இருவர், நமக்கு ஒரு கிரிக்கெட் டீம்” என மக்கள் தொகையை ராக்கெட் வேகத்தில் ஏற்றின. இதனால், அதிகம் பாதிக்கப்பட்டது அம்மாநிலத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்கள்தான்.
இப்போது பல வருடங்கள் கழித்து மத்திய அரசு சொல்கிறது, “எந்த ஊரில் ஆட்கள் அதிகமோ, அவர்களுக்குத்தான் இனி நாடாளுமன்றத்தில் எம்.பி சீட் அதிகம்” என்று! அடப்பாவிகளா, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்குக் கிடைத்த பரிசு, நாடாளுமன்றக் கட்டுப்பாட்டை இழப்பதுதானா?
அதாவது, ஒரு பெரிய ஹோட்டலில் சாப்பிடாமலே தென்னிந்தியா பில் கட்டுகிறது, அதே ஹோட்டலில் பில் கட்டாமல் வட இந்தியா தனக்குப் பிடித்த மெனு கார்டை முடிவு செய்கிறது.