டேவிட் கொஞ்சம் கூட கோபப்படாமல், அன்பாகச் சிரித்துக்கொண்டே கூறினார்: “நீங்கள் அப்படி நினைத்ததில் நான் உங்களைக் குறை சொல்ல மாட்டேன்! எனக்கு ஒரு மருத்துவப் பிரச்னை உள்ளது, அதனால்தான் என் உடல் எடை இப்படி இருக்கிறது. நான் முன்பு விமான நிறுவனத்தில் தான் வேலை செய்து வந்தேன். இந்த விமானப் பணியாளர்கள் தினமும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், அவர்கள் வேலை எவ்வளவு நெருக்கடியானது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதனால், நான் எப்போது பயணம் செய்தாலும், அவர்களுக்கு இப்படி இனிப்புகளை வாங்கிக் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளேன்.”
டேவிட்டின் இந்தப் பதிலைக் கேட்ட அனுபம் கெர் நெகிழ்ந்துள்ளார். ஒருவர் மீது நாம் எவ்வளவு எளிதாகக் குற்றம் சாட்டுகிறோம், அவர்களைப் பற்றி எதுவும் தெரியாமலேயே எவ்வளவு சீக்கிரம் ஒரு முடிவுக்கு வருகிறோம் என்பதை எண்ணி வருந்தியுள்ளார். டேவிட்டிடம், தனக்கொரு வாழ்க்கைப் பாடம் கிடைத்ததற்கு நன்றியைக் கூறி, அவருடன் ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார்.

`ஒரு புத்தகத்தின் அட்டையை வைத்து அதனுள்ளே இருக்கும் கதையை மதிப்பிட்டு விடக் கூடாது’ என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணம். ஒருவரின் தோற்றத்தைப் பார்த்தோ, அல்லது அவர்களின் ஒரு சிறு செயலைப் பார்த்தோ அவர்களை தவறாக எடைபோடக் கூடாது. பல நேரங்களில், நாம் தவறாக நினைக்கும் நபர்கள் தான், உலகின் மிகச் சிறந்த மனிதர்களாகவும், இரக்க குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களின் வாழ்க்கைப் போராட்டமோ, மருத்துவ நிலையோ நமக்குத் தெரியாது. எனவே, முன்முடிவுகள் இல்லாமல், அனைவரிடமும் அன்போடும், புரிதலோடும் நடந்துகொள்வதே நாம் மனிதர்களுக்குச் செய்யும் உண்மையான மரியாதை.