கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியின் த.வெ.க எம்.எல்.ஏ-வாக இருப்பவர் இளையராஜா. இவர், 29-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜைச் சந்தித்து புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதில் யூடியூபரும் தேர்தல் வியூக அமைப்பாளருமான சென்னையைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர், தன்னை செல்போனில் சில தினங்களுக்கு முன்பு தொடர்பு கொண்டார். அப்போது அவர், மக்கள் பணியைச் செய்யக் கூடாது என்றும் அதற்காக 35 கோடி ரூபாய் வரை லஞ்சம் தருவதாகவும் கூறினார். மேலும் இந்தத் தகவலை வெளியில் சொன்னால் பிள்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டினார்.
இந்தப் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில் எம்.எல்.ஏ இளையராஜாவை கூறிய குற்றச்சாட்டுக்கள் உண்மையென தெரியவந்தது.
இதையடுத்து யூடியூபர் திருநாவுக்கரசுவை போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவை தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ-வான செந்தில் பாலாஜி, அவரின் சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் அவர்களிடமும் விசாரணை நடத்த சென்னைப் போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸார் கூறுகையில், `இந்த வழக்கை பொறுத்தவரை மிகவும் சென்ஸ்டிவ்வானது. அதனால் சில முக்கிய தகவல்களை வெளியில் சொல்ல முடியாது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் யூடியூபரான சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் எம்.எல்.ஏ இளையராஜாவிடம் போனில் பேசியதை உறுதி செய்திருக்கிறோம்.
அதன் அடிப்படையில்தான் அவரை நாங்கள் கைது செய்திருக்கிறோம். இவர், indian political democratic strategies (IPDS) என்ற கருத்து கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்துவிட்டு அரசியல் தொடர்பான தகவல்களை யூடியூப்பில் வீடியோவாக பேசி வருகிறார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க கட்சிக்கு அதிக சீட்கள் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பை தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில்தான் திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ் மூலம் இந்த பேரத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது.
திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னையைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோரை திருநாவுக்கரசு சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது எம்.எல்.ஏ இளையராஜா உள்பட சில த.வெ.க எம்.எல்.ஏ-க்களின் பட்டியலை திருநாவுக்கரசுவிடம் கொடுத்து அவர்களிடம் பேச இந்த டீம் சொல்லியிருக்கிறது. அதன்படி திருநாவுக்கரசும் பேசியிருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.