த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை தொடர்புகொண்டு ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் பணம் வழங்க முயன்றதாக கூறப்படும் விவகாரத்தில், IPDS நிறுவனர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 8 மற்றும் 12 உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் (FIR), த.வெ.க. எம்.எல்.ஏ. ஒருவரை தொடர்புகொண்டு 35 கோடி ரூபாய் வரை வழங்கத் தயாராக இருப்பதாகவும், சபாநாயகர் மீதான தீர்மானத்தின் போது குறிப்பிட்ட வகையில் செயல்பட வேண்டும் என்றும் பேரம் பேசியதாக குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இதில் நரேஷ், கிருஷ்ணன் மற்றும் அசோக் குமார் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இருவருக்கும் எதிராக லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. எனினும், திங்கட்கிழமை நடைபெறவிருந்த விசாரணைக்கு இருவரும் ஆஜராகவில்லை.

இந்த நிலையில், வழக்கில் தன்னை கைது செய்யும் வாய்ப்பு இருப்பதாகக் கூறி, முன்ஜாமீன் வழங்குமாறு கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அரசியல் உள்நோக்கத்துடன் தனது பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தரப்பில் வாதிடப்படலாம் என சட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு, அடுத்தகட்ட விசாரணை மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.!