
சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்ற பிறகு காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஜ, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் கூட்டணியை வலுப்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை தவெக திட்டமிட்டு வருவதாகவும், இதில் முதற்கட்டமாக கடந்த ஜூலை 1 ஆம் தேதி கோவளத்தில் தோழமை கட்சிகளுடனான முதல் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்காத நிலையில், 2ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் தலைமையில் வருகின்ற 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு தோழமைக் கட்சித் தலைவர்களை ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகிய அமைச்சர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.
தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோரைச் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலச்செயலாளர் வீரபாண்டியனை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் வீரபாண்டியன் கூறும்போது, ‘‘தவெக தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் நடந்த முதல்கட்ட ஆலோசனையில் நாங்கள் பங்கேற்க இயலாததால், முதலமைச்சரைச் சந்தித்து தெளிவுபடுத்தினோம். இப்போதும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும். தற்போது வரை அமைச்சரவையிலும் கூட்டணியிலும் இடம் பெறுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் மாநிலத்தை ஆளும் அரசியல் கட்சி, தனது கருத்துகளை முன்வைக்கும்போது அதற்கு மதிப்பளித்து, எங்களது கட்சி தலைமையிடம் அதை தெரிவிப்போம்” என்றார்.
அதனைத் தொடர்ந்து, இடதுசாரிகள் த.வெ.க. கூட்டணியில் இல்லை என்று தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். த.வெ.க. கூட்டணியில் தாங்கள் இல்லை என்றும், வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சுற்றறிக்கை விவகாரத்தில் அமைச்சர்கள் அளித்த விளக்கத்தை ஏற்க முடியாது என்றும், தமிழ்நாட்டில் அதிகாரிகளே அரசை வழிநடத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.