“நடிகர் விஜய்சேதுபதிக்கு தற்போது நேரம் சரியில்லை.. காசு வாங்கிக் கொண்டு பேசுகிறார்” – கனிமொழி கணிப்பு..! – Kumudam

Spread the love

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செரையம்பாளையம் பகுதியில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்து சேவையை MLA கனிமொழி சந்தோஷ் மீண்டும் துவக்கி வைத்தார். பின்னர் பேருந்தில் சிறிது தூரம் பயணம் செய்து பொதுமக்கள் மத்தியிலும் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் கலந்துரையாடினார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த MLA கனிமொழி சந்தோஷ், கொரோனாவிற்கு முன்பு இப்பகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் துவக்கி வைத்துள்ளதாகவும், ஏன் சேவை நிறுத்தப்பட்டது என்பது குறித்து முந்தைய ஆட்சியாளர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றும்,  அவர்கள் மக்களின் குறைகளை பார்க்கவில்லை பாக்கெட்டுகளை தான் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்கள், ஆனால் நாங்கள் மக்கள் குறைகளை பார்த்து செயல்படுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜயை பற்றி விமர்சித்ததாக கருத்துக்கள் பரவி வருவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ”அது ஒரு கேளிக்கை நிகழ்ச்சி நடிகர். விஜய் சேதுபதி மகாராஜா திரைப்படம் நடிப்பதற்கு முன்பு அவருடைய நிலை எவ்வாறு உள்ளது என்பதை கட்டங்கள் பார்த்து கூறி இருந்தேன். அப்பொழுது அவருக்கு ஜாக்பாட் அடிக்க போகிறது என்று கூறி இருந்தேன். பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஒரு ஜாக்பாட் ஆக இருந்தது. இந்த நூறு நாளில் சுமார் 80 கோடி வரை அவர் சம்பளம் வாங்குவார். எனவே சம்பளத்திற்காக அவர் பேசியிருக்கிறார். 

அந்த தொலைக்காட்சியிடம் கேட்கும் பொழுது முதலமைச்சரை குறிப்பிட்டு நாங்கள் பேசவில்லை என்று விளக்கம் கூறுகிறார்கள். ஆனால் ஓபன் ஆக சொல்ல வேண்டும் என்றால் அது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல தான் என்று விமர்சித்தார். எங்களைப் பொறுத்தவரை அரசியல் விமர்சனம் யார் வேண்டுமானால் வைக்கலாம், ஆனால் பார்த்து பேச வேண்டும். அவர் பேசுவதால் இங்கு எந்த ஒரு விஷயமும் மாறப் போவது கிடையாது. எங்களுடைய அரசாங்கம் வெளிப்படையாக என்னென்ன நடக்கிறது, அவர் என்ன செய்கிறார், எங்கு செல்கிறார், என்ன சாப்பிடுகிறார் என்பது முதல் கொண்டு வெளிப்படையாக கூறுகிறோம். 

விஜய் சேதுபதிக்கு ஜாக்பாட் என்பது கண்டிப்பாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. மேலும் அவர் கண்டிப்பாக குறிப்பிட்ட கட்சியினரிடம் இருந்து காசு வாங்கிக்கொண்டு பேசுகிறார். எங்கள் தலைவரின் பெயரை குறிப்பிட்ட அவர் பேச சொல்லுங்கள். அதற்கு நாங்கள் பதில் கூறுகிறோம். மக்கள் பதில் கூறுவார்கள். என்னை பொருத்தவரை இதை இன்னைக்கு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர் அவருடைய பிழைப்பிற்காக செய்கிறார். சட்டசபை செல்லும் பொழுது யாரும் நாடகம் கூட பார்க்கவில்லை. குழந்தைகள் முதல் அனைவரும் சட்டசபையை பார்க்கிறார்கள்.
 
விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை இதோடு விட்டால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார். இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு தேர்தலுக்கு முன்பு கேட்டிருந்தால் கூட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை கூறி இருக்கலாம். எங்களுடைய ஆட்சியை தற்போது கண்கூட மக்கள் பார்த்து விட்டார்கள். மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை வந்து விட்டது. எனவே இடைத்தேர்தலில் எங்கள் தலைவர் யாரை நிற்க வைக்கிறாரோ அவர்தான் வெற்றியாளர்” என்று தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *