நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல மாதங்களாக வயலில் உழைத்து அறுவடை செய்த நெல்மணிகளை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் கொள்முதல் நிலையங்களை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், குறிப்பிட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர்.

குறிப்பாக, அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் இதுவரை திறக்கப்படாததால், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை வீடுகளின் முன்பாகவும், சாலையோரங்களிலும், திறந்தவெளியிலும் குவித்து வைத்திருந்தனர். இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கனமழை பெய்தது. மழைநீர் புகுந்ததுடன், திறந்தவெளியில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் முழுவதுமாக நனைந்து சேதமடைந்தன.