ஆனால் ராஜ் வேறுவிதமாக முடிவெடுத்தார். படப்பிடிப்புத் தளத்தில் அவர் உடனிருந்தது எனக்கு மிகுந்த தைரியத்தை அளித்தது. அவருக்கு என் மீது அதிக நம்பிக்கை இருப்பதாகத் தோன்றுகிறது. நான் கிட்டத்தட்ட முயற்சியைக் கைவிடும் நிலையில் இருந்தேன். ‘சிட்டாடல்’ படக்குழுவினருக்கு ஒரு மின்னஞ்சலும் அனுப்பினேன். ஆனால் அவர்கள் என் மீதான நம்பிக்கையைக் கைவிடவில்லை.
‘மா இன்டி பங்காரம்’ படத்தில் நடிக்க சாய் பல்லவியும் மறுத்துவிட்டார். அதனால்தான் நான் அந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்தேன். அந்தக்கதைக்கு நல்ல ஆற்றல் இருப்பதாகவும், அது திரைக்கு வர வேண்டும் என்றும் நான் கருதினேன்,” என்றார்.
தனது உடல் நிலை குறித்தும் சமந்தா இதற்கு முன்பு சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதில், மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், தனது பதிவில், “சில மாதங்களுக்கு முன்பு, எனக்கு ‘மையோசிடிஸ்’ (myositis) எனப்படும் தன்னுடல் தாக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு இதைப் பற்றிப் பகிரலாம் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால், நான் எதிர்பார்த்ததை விட இதற்கு அதிக காலம் தேவைப்படுகிறது.
ஒரு நாளைக் கூடதாங்க முடியாது என நினைத்தேன்
நாம் எப்போதும் வலிமையானவர்களாகவே காட்டிக்கொள்ள வேண்டியதில்லை என்பதை நான் மெல்ல உணர்ந்து வருகிறேன். இந்த இயலாமை அல்லது பலவீனத்தை ஏற்றுக்கொள்வது என்பது, நான் இன்னும் போராடிக்கொண்டிருக்கும் ஒரு விஷயமாகவே இருக்கிறது. நான் மிக விரைவில் முழுமையாகக் குணமடைவேன் என்று மருத்துவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எனக்கு நல்ல நாட்களும் கடினமான நாட்களும் இருந்திருக்கின்றன.
இன்னும் ஒரு நாளைக் கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்று தோன்றும் தருணங்களில் கூட, எப்படியோ அந்தத் தருணம் கடந்துவிடுகிறது. குணமடைவதை நோக்கி நான் மேலும் ஒரு நாள் நெருங்கிவிட்டேன் என்பதையே இது குறிக்கிறது என்று நினைக்கிறேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். இதுவும் கடந்து போகும்” என்ற வார்த்தைகளுடன் அவர் அந்தப் பதிவை நிறைவு செய்தார்.