Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
வேலூர்: நயினார் நாகேந்திரன் மீது கை வைத்தால், தவெக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்ற அச்சம் முதல்வர் விஜய்க்கு இருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். மத்திய அரசுக்கு விழுந்து விழுந்து தவெக ஆதரவு கொடுப்பதாக கூறிய துரைமுருகன், பாஜகவை அட்டாக் செய்ய விஜய் அஞ்சுவதாகவும் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வர் விஜய்யின் தாயார் குறித்து அவதூறாக பேசிய கருத்துக்கள் விவாதமாகி இருக்கிறது. நயினார் நாகேந்திரன் மீது தவெகவினர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. உதயநிதி ஸ்டாலின் போல் அவரும் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

நயினார் நாகேந்திரனின் பேச்சிற்கு பாஜக துணைத் தலைவர் குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசுகையில், தவெக ஆட்சியில் 100 நாட்களில் இதனை சாதித்தோம் என்று எதையாவது சொல்ல சொல்லுங்கள்.. 100 நாளில் பெரிய இமய மலை அளவிற்கு சாதனை செய்ய முடியாது. ஆனால் ஒரு குன்று அளவிற்காவது சாதனை செய்யலாம்.
பேசிக் கொண்டே இருக்கிறார்களே தவிர, காரியத்தில் இறங்கவில்லை. மகளிருக்கு ரூ.2500 கொடுத்துவிட்டேன், குடும்பத்திற்கு 6 சிலிண்டர் கொடுத்துவிட்டேன் என்றால் பரவாயில்லை. அவர்கள் இன்னும் தேர்தல் வாக்குறுதி பக்கமே செல்லவில்லை. திமுக சொல்லாததை கூட சொன்னதாக தவெகவினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் விசித்திரமாக இருக்கிறது.
திமுகவுக்கு பாஜக உடன் எந்த உறவும் இல்லை.. ஒட்டும் இல்லை.. திட்டவட்டமாக கூறிவிட்டோம்.. கொள்கை ரீதியாக ஒத்து வராது.. அரசியல் ரீதியாகவும் சரியாக வரவில்லை. ஆனால் தவெக தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு விழுந்து விழுந்து ஆதரவு கொடுக்கிறார்கள். இதன் மூலமாக யார் பாஜகவுடன் செல்வார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். யார் பின்னால் பாஜக இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
அதேபோல் நயினார் நாகேந்திரன் அப்படி பேசக்கூடியவர் அல்ல.. ஆனால் சேர்க்கை அப்படி இருக்கிறது போல.. சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான் என்று பத்திரிகையாளர் கேட்பதை முதல்வர் விஜய்க்கு அர்ப்பணித்து கொள்கிறேன். பாஜகவை அட்டாக் செய்ய தவெக அஞ்சுகிறது. ஏற்கனவே பல்லக்கு தூக்க ரெடி என்று விஜய்யே சொல்லிவிட்டார். பாஜக நிர்வாகி மீது கை வைத்தால், இந்த ஆட்சியை மத்திய அரசு ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.