கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ரா. கணவரை இழந்த இவர், கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் நகுல், மகள் நவ்யா ஆகியோர் அடுத்தடுத்து நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டனர். இதனால் இவர்கள் இருவராலும் நடக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இருவரின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டதோடு, வீட்டிலேயே முடங்கி இருக்கும் துயர நிலை ஏற்பட்டது. மேலும் நகுல், நவ்யா ஆகியோருக்குப் படிக்கும் ஆர்வம் இருந்தாலும், பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
கூலி வேலை மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் இருவருக்கும் மருத்துவச் சிகிச்சை அளிக்க முடியாமல் சித்ரா தவித்து வருகிறார்.

இது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில், மேட்டுப்பாளையம் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் அக்குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
தனது ஆதரவாளர்களுடன் நேரில் சென்ற சுனில் ஆனந்த் அக்குடும்பத்தினரின் நிலை குறித்து நேரில் கேட்டறிந்தார். மேலும் தனது சொந்தப் பணத்தில் இருந்து அக்குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான பொருள்களையும் வழங்கி உதவினார்.
அப்போது குழந்தைகளின் மருத்துவம் மற்றும் கல்விக்கு உதவுமாறு சித்ரா வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று குழந்தைகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கவும், ஆசிரியரை வீட்டிற்கே வரவழைத்து குழந்தைகள் கல்வி பயிலவும் உதவுவதாகவும் சுனில் ஆனந்த் உறுதியளித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சித்ரா குடும்பத்தினர் கண்ணீர் மல்க சுனில் ஆனந்திற்கு நன்றி தெரிவித்தனர்.