India
oi-Vishnupriya R
போபால்: முதல்வர் ஜோசப் விஜய் பெயரில் அறக்கட்டளை நடத்தி 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி தருவதாகவும், தொழில் தொடங்க கடன் வழங்குவதாகவும் கூறி ஆன்லைன் மூலம் பணமோசடிகள் நடந்துள்ளதாக மத்திய பிரதேச போலீஸில் 6 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வடமாநிலங்களில் விஜய் குறித்து பொய்யான தகவல்களை பரப்பி இன்ப்ளூயன்ஸர்கள் பணம் சம்பாதிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதாவது விஜய்தான் அடுத்த பிரதமர், அவர் தமிழகத்தை நல்ல விதமாக நடத்திவருகிறார் என்றெல்லாம் வீடியோக்களை பதிவிட்டிருந்தனராம்.

இதை பயன்படுத்தி மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு கும்பல் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
விஜய் தனது சொந்த பணத்தை ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்காக செலவழித்து வருவதாக வடமாநில இன்ப்ளூயன்ஸர்கள் காசுக்காக இது போன்ற பொய்யான தகவலை பரப்பி வருகிறார்களாம்.
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதிகளில் விளிம்பு நிலையில் இருக்கும் பொதுமக்களை தொலைபேசியில் ஒரு கும்பல் அழைத்து, “நாங்கள் முதல்வர் விஜய்யின் ஆட்கள். விஜய் பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறோம். அதில் நாங்கள் பணி புரிகிறோம்.
ஏழை மக்களுக்கு உதவுவதே எங்களது நோக்கம், வங்கிக் கணக்குகளை தொடங்கி தருகிறோம். ஸ்டார்ட் அப் நிறுவனம் அமைக்க உதவுகிறோம். அது போல் வணிகங்களை அமைக்கவும் தேவையான அநைத்து உதவிகளையும் செய்கிறோம்.
கல்விக் கடன்கள், வெளிநாட்டில் படிக்க நிதியுதவி போன்றவற்றையும் நாங்கள் கொடுக்கிறோம்” என கூறினார்களாம். இந்த உதவிகளை பெற பதிவு கட்டணமாக ரூ.1000 முதல் ரூ 50 ஆயிரம் வரை இவர்கள் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
இவர்களின் பேச்சை நம்பிய ஏழை எளிய மக்கள் கடனை வாங்கியும் நகைகளை அடகு வைத்தும் பணத்தை புரட்டி அவர்களிடம் கொடுத்தனராம். ஆனால் பல நாட்கள் ஆகியும் அவர்களிடம் இருந்து எந்த போன் அழைப்பும் வரவில்லை. இவர்களாகவே போன் செய்தாலும் எந்த பதிலும் இல்லையாம்.
இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து போலீஸில் புகார் அளித்தனர். இது தொடர்பாக ஏராளமானோர் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் அந்த தொலைபேசி எண்களை ஆய்வு செய்தனர். அப்போது இது ஒரு சைபர் கிரைம் மோசடி என்பதை தெரியவந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் தமிழக போலீஸாரும் சேர்ந்து மோசடிபேர்வழிகளை கண்டுபிடிக்க முனைப்பு காட்டி வருகிறார்கள். இத்தனை நாட்களாக சினிமா நடிகர், நடிகைகள், மாவட்ட ஆட்சியர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் பெயரில்தான் இது போன்ற மோசடிகள் நடந்துள்ளன. ஆனால் முதல்வர் விஜய் பெயரில் இது போன்று ஒரு மோசடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.