“கடந்த காலத்தில் நாடார் சமுதாயத்துக்கு எதிராக நீங்கள் பேசிவிட்டதாக சர்ச்சை எழுந்ததே?”
“எந்த சமுதாயத்துக்கு எதிராகவும் நான் பேசியது கிடையாது. ‘சுய சாதிப்பற்று; பிற சாதி நட்பு’ என்பதுதான் எங்கள் ஸ்லோகமே… யாரொருவரையும் சாராமல் இந்த உலகில் வாழ்ந்துவிட முடியாது. அதனால்தான், ‘மொழி, இனம் என உணர்வோடு இருப்பது தவறில்லை. அது வெறியாகிவிடக்கூடாது. உணர்வு உன்னை உயர்த்தும்; வெறி உன்னை வீழ்த்தும்’ என எங்கள் இளைஞர்களிடையே சொல்லி அவர்களை வாழ்வின் முன்னேற்றம் நோக்கி அழைத்துச் செல்கிறேன்!
சில வருடங்களுக்கு முன்பு கோவை, பள்ளப்பாளையத்தில் பெருந்தலைவர் காமராஜர் பற்றி நான் பேசியிருந்தது அவர் சார்ந்த சமூகத்தினரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. அதாவது, பெருந்தலைவர் காமராஜர் இளைஞனாக இருந்த காலகட்டத்தில், ஆடு, மாடுகளுக்குக்கூட நகராட்சியில் வரி செலுத்திதான் வளர்க்க முடியும் என்ற விதி நடைமுறையில் இருந்தது. நகராட்சி தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட வேண்டுமானால், அந்த வேட்பாளர் ஏற்கெனவே நகராட்சிக்கு வரி செலுத்துபவராக இருக்க வேண்டும் என்ற விதியும் இருந்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் நகராட்சி தேர்தலில் காமராஜரைப் போட்டியிடவைக்க விரும்பினார் முத்துராமலிங்கத் தேவர். எனவே, தானே ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கி அதற்கு காமராஜரின் பெயரில் நகராட்சியில் வரியும் செலுத்தியதோடு அந்த ரசீதை முன்வைத்து காமராஜரை தேர்தலில் போட்டியிட வைத்தார் என்பது வரலாற்று உண்மை. இதுகுறித்து மறைந்த பழம்பெரும் பேச்சாளர் குமரிஅனந்தன் ஐயாவும் தனது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அதைத்தான் அன்றைக்கு நான் மேடையில் பேசினேன். இதில் என்ன தவறு இருக்கிறது?”
“சமூக ஆர்வலர்கள் அனைவரும் ‘ஆணவக்கொலை தடுப்பு சட்ட’த்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சட்டம் கொண்டுவரக்கூடாது என நீங்கள் மனு கொடுத்திருப்பதன் நோக்கம் என்ன?”
“ஆணவப்படுகொலையை நான் ஆதரிக்கவில்லை. எனவே, ஆணவக்கொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுப்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. அதேசமயம் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்பதைத்தான் நாங்கள் மனுவாகக் கொடுத்திருக்கிறோம்.
ஏனெனில், சமுகத்தில் இதுபோன்ற சம்பவங்களின்போது உணர்ச்சி ரீதியாக முடிவெடுத்துவிடுகிறார்கள். அண்மையில் காதலர்கள் இருவர், தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், ‘காதலர்களை அடித்துக்கொன்றுவிட்டார்கள். இது ஆணவப் படுகொலை’ என்கிறார்கள் மக்கள். ஆனால், வழக்கை விசாரிக்கும் காவல்துறையோ, ‘இல்லை இது தற்கொலைதான்’ என்கிறது. ஆனாலும் உணர்ச்சி ரீதியாக மக்கள் எழுப்பும் குரல்களுக்கு இருக்கும் பரபரப்பு, காவல்துறை தரும் செய்திக்கு இல்லை. ஆக, இப்படிப்பட்ட சூழல்களில் தீர விசாரிக்காமல், உணர்ச்சி ரீதியாக தண்டனை கொடுக்கப்பட்டுவிட்டால் அப்பாவிகள்தானே பாதிக்கப்படுவார்கள்.
உதாரணமாக பி.சி.ஆர் எனப்படும் வன்கொடுமை தடுப்பு சட்டம் நிறைய இடங்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இதுபோல் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்காமல், நேர்மையான விசாரணை மூலம் குற்றவாளிகளைக் கண்டறிந்து என்ன தண்டனையோ அதை வழங்கலாம். அதேசமயம் வழக்கில் சம்பந்தப்பட்ட பெற்றோர் அரசு வேலை பார்ப்பவராக இருந்தால், அந்த வேலையைப் பறித்து பொருளாதார ரீதியாக அவர்களைப் பலவீனப்படுத்துவது போன்ற உள்நோக்கங்கள் எதுவும் அந்த சட்டத்தில் இருக்கக்கூடாது என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்!”