கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெட்டுதுறை புதுவல் பகுதியைச் சேர்ந்தவர் மெர்சி (65). இவர் கடினங்குளம் சான்னாங்கரை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது மகள் பிந்து மற்றும் பிந்துவின் கணவர் ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர். பிந்துவின் மகனான ஷிபின் (23) மற்றும் அவரது சகோதரன் ஆகியோர் அவ்வப்போது பாட்டி மெர்சியின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
மூதாட்டி மெர்சி அங்குள்ள மீன்பிடி வலை பின்னும் கூடத்தில் கூலி வேலை செய்து பேரன்களை கவனிப்பதுடன் தனது வாழ்க்கையையும் நடத்தி வந்துள்ளார். அவரது பேரன் ஷிபின் தொடர்ந்து மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். நேற்று காலையிலும் ஷிபின் மதுபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். காலை நேரத்திலேயே குடித்துவிட்டு வந்த பேரனை மெர்சி கண்டித்துத் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷிபின், பாட்டி மெர்சியை சரமாரியாகத் தாக்கியதோடு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில் பலமாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

பாட்டியை குத்திய கையோடு, ரத்தம் சொட்டும் கத்தியைக் கையில் ஏந்தியபடி அருகிலிருந்த மீன்பிடி வலை பழுதுபார்க்கும் இடத்திற்கு ஷிபின் ஓடினார். அங்கிருந்த தொழிலாளர்களிடம், “நான் பாட்டியைக் கொன்னுட்டேன்” என்று கத்திக் கூச்சலிட்டுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, மெர்சி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு தாலுகா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.